தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியின் பராமரிப்பில் கீழ் உள்ள தமிழ்நாடு அரசுக்கு சொந்தமான இந்தியன் வங்கி அருகில் உள்ள இடத்தில் சிறுபான்மை கல்வி நிறுவனமான இமாம் ஷாஃபி பள்ளி வாடகைக்கு இயங்கி வருகிறது. உலக கல்வியுடன் இஸ்லாமிய மார்க்க நல்லொழுக்க கல்வியை போதிக்கும் இந்த பள்ளி நிர்வாகத்திடம் தற்போது வாடகைக்கு இருக்கும் இடத்தை விற்பனை செய்ய தமிழ்நாடு அரசு கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு முடிவு செய்தது. அந்த நிலத்திற்கான விலையும் இறுதி செய்யப்பட்டு விற்பனை முடிய இருந்த சூழலில் உள்ளூர் புள்ளிகள் சிலர் லட்சக்கணக்கில் கமிஷன் கேட்டதாக கூறப்படுகிறது. அந்த கமிஷனை பள்ளி நிர்வாகம் கொடுக்க மறுத்ததால் அந்த இடத்தை சிறுபான்மை கல்வி நிறுவனத்திற்கு விற்பனை செய்யவிடாமல் கடந்த 15 ஆண்டுகளாக சிலர் அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி தடுத்து வருகின்றனர்.
இந்த சூழலில் கடந்த 2010ம் ஆண்டு அப்போதைய தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் கருணாகரன் ஐ.ஏ.எஸ் திமுக அரசுக்கு தாக்கல் செய்த இந்த இடம் தொடர்பான அறிக்கையில், திமுக நகர செயலாளரும் அப்போதைய பேரூர்மன்ற துணை தலைவருமான இராம.குணசேகரன் உள்நோக்கம் கொண்டு செயல்படுவதாக குறிப்பிட்டு உண்மையை வெட்டவெளிச்சமாக்கினார். இத்தகைய சூழலில் இடத்தை தாங்கள் விலை கொடுத்து வாங்க போகிறோம் என்பதால் பேரூர் நிர்வாகத்திற்கு இமாம் ஷாஃபி பள்ளி வாடகை செலுத்தவில்லை.
இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட கமிஷன் ஆசாமிகள், வாடகை செலுத்தாததால் இமாம் ஷாஃபி பள்ளி இடத்தை காலி செய்ய வேண்டும் என கூறி நீதிமன்றத்தை நாடி தீர்ப்பை பெற்றனர். இதனிடையே பேரூராட்சியாக அதிரை இருந்த வரை அனைத்து நிலுவை தொகையையும் இமாம் ஷாஃபி பள்ளி செலுத்திவிட்டது. ஆனால் நகராட்சியான பிறகு சிறுபான்மை விரோத அரசியல்வாதிகளின் தலையீட்டால் இமாம் ஷாஃபி பள்ளியிடம் இருந்து வாடகையை பெற நகராட்சி நிர்வாகம் மறுத்து வருகிறது.
இதனிடையே மேல்முறையீட்டு வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கு சூழலில் நாளை மறுநாள் சிறுபான்மை கல்வி நிறுவனமான இமாம் ஷாஃபி பள்ளி இயங்கி வரும் இடத்தை ஜப்தி செய்யபோவதாக நகராட்சி தரப்பில் நோட்டீஸ் ஒட்டப்பட்டது. இதனையடுத்து நாளையதினம் திங்கட்கிழமை காலை 10 மணிக்கு நகராட்சி முன்பு ஜனநாயக வழியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் கட்சிகள் முடிவு செய்துள்ளனர்.
இதனை பொறுத்துக்கொள்ள முடியாத நகராட்சி தரப்பினர் வேண்டுமென்றே சட்ட ஒழுங்கு பிரச்சனையை உருவாக்க வேண்டும் என்கிற தீய நோக்கில் நாளையதினம் போட்டி போராட்டத்தில் ஈடுபட போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இன்னும் 3 மாதத்தில் மக்களவை பொதுத்தேர்தல் நடைபெற இருக்க கூடிய சூழலில் அமைதி பேச்சுவார்த்தையை நடத்தவிடாமல் அரசு அதிகாரிகளை முடக்கி தாம்பரம் சிறுபான்மை கிறிஸ்தவ கல்வி நிலையத்தில் நிகழ்த்தியதைபோல் அதிரையிலும் வன்முறையை கட்டவிழ்த்துவிட கமிஷன் ஆசாமிகள் தீவிரம் காட்டி வருவது சிறுபான்மை பாதுகாவலர் அரசாக அறியப்படும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசுக்கு களங்கம் ஏற்படுத்தும் முயற்சியாகவே பார்க்கப்படுவதாக விபரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர்.