நாடாளுமன்ற தேர்தல் 2024 தேர்தல் தேதி குறித்து அறிவிப்பு வரவிருக்கும் நிலையில் பல்வேறு அரசியல் கட்சிகள் தொடர்ந்து கூட்டணி குறித்த பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில் தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகளுக்கு ஏற்கனவே தலா 2 தொகுதிகள் மற்றும் இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக்கிற்கு 1 தொகுதி ஒதுக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டு தொகுதி பங்கீடு கையெழுத்தானது. இன்று அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்வில் முதல்வரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலினும், மதிமுக பொதுச்செயலாளர் வைகோவும் தொகுதிபங்கீட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த வைகோ, திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், அந்த தொகுதியில் மதிமுக தனிச் சின்னத்திலேயே போட்டியிடும் என்றும் உறுதிபட தெரிவித்தார்.