அதிரை எக்ஸ்பிரஸ்:- தஞ்சாவூர் அருகே தலித் கிராமத்தை சாதிவெறிக் கும்பல் தாக்குதல்.
நேற்று முன் தினம் இரவு ஒரத்தநாடு அருகில் உள்ள ஆம்பலபட்டு – தெற்கு குடிக்காடு இந்த கிராமத்தை சேர்ந்த தலித் இளைஞர்கள் தங்கள் பகுதியில் பலூன் கட்டி கலர் பேப்பர் தோரணம் அமைத்து புத்தாண்டினை கொண்டாடி இருக்கின்றனர்.
இரவு 1 மணி இருக்கும் வேறொரு கிராமத்தை சார்ந்த இளைஞர்கள் கட்டி இருந்த தோரணங்களை சேதப்படுத்தி இருக்கின்றனர்.
நேற்று 1.1.2018 அதிகாலை 2 மணி அளவில் 80 பேர் கொண்ட கும்பல் கத்தி,அருவாள்,உருட்டுக்கட்டை உள்ளிட்ட ஆயுதங்களை கொண்டு தலித் குடியிருப்பில் தாக்குதல் நடத்தி இருக்கின்றனர்.
தாக்குதலில் ஈடுபட்ட அனைவரும் 15 -25 வயதினை சேர்ந்தவர்கள்.
சாதியை குறிப்பிட்டு இழிவான வார்த்தைகளால் திட்டி, இட ஒதுக்கீட்டில் படித்து அரசு வேலையில் இருந்து கொண்டு எங்களை முந்த பார்க்கிறீர்களா என்று கூறி தாக்குதல் நடத்தி இருக்கின்றனர்.
இந்த தாக்குதலில் 8 பேர் காயம் அடைந்து உள்ளனர்.15 வீடுகள் சேதப்படுத்தப்பட்டு உள்ளன.15 இரண்டு சக்கர வாகனங்களும் சேதப்படுத்த பட்டு இருக்கின்றன.
குற்றவாளிகளை கைது செய்ய கூறி தஞ்சாவூர் – பட்டுக்கோட்டை சாலையில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.