மக்களவை மற்றும் 18 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர்களுக்கு பொதுச் சின்னமாக பரிசுப் பெட்டி சின்னம் ஒதுக்கீடு செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. டி.டி.வி.தினகரன் கட்சிக்கு குக்கர் சின்னம் தர தேர்தல் ஆணையம் மறுத்த நிலையில் பரிசுப் பெட்டி ஒதுக்கப்பட்டு உள்ளது.
முன்னதாக அ.ம.மு.க. கட்சியாகப் பதிவு செய்யப்படவில்லை என்பதால், தினகரனுக்கு பொதுச்சின்னமாக குக்கர் சின்னத்தை ஒதுக்க முடியாது என உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தெரிவித்தது. இதை ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம், தினகரன் தரப்புக்கு குக்கர் சின்னத்தை மறுத்ததோடு, தினகரன் சார்பில் நிறுத்தப்படும் வேட்பாளர்களுக்கு பொதுச் சின்னம் ஒன்றை வழங்க தேர்தல் ஆணையத்துக்கு பரிந்துரை செய்தது.
பின்னர் உச்சநீதிமன்ற உத்தரவு நகலுடன் தாங்கள் எதிர்பார்க்கும் மூன்று சின்னங்கள் அடங்கிய பட்டியலை தேர்தல் ஆணையத்திடம் டி.டி.வி. தினகரன் தரப்பு சமர்ப்பித்தது. இதுவரை எந்தப் பதிவு செய்யப்பட்ட கட்சிக்கும் ஒதுக்கப்படாத, தொப்பி, குக்கர், சாவி ஆகிய மூன்று பொதுச் சின்னங்களில் இருந்து ஒன்றை தங்களுக்கு ஒதுக்குமாறு தினகரன் தரப்பு கேட்டுக்கொண்டது. இந்நிலையில் அ.ம.மு.க.வுக்கு பொதுச் சின்னமாக பரிசுப் பெட்டி சின்னம் ஒதுக்கீடு செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.