தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சிக்குட்பட்ட தமிழ்நாடு அரசு இடத்தில் சிறுபான்மை கல்வி நிறுவனமான இமாம் ஷாஃபி பள்ளி வாடகைக்கு இயங்கி வருகிறது. இந்த இடத்தை அந்த பள்ளிக்கே விற்பனை செய்ய தமிழ்நாடு அரசு முடிவு செய்த நிலையில், உரிய கமிஷன் தராததால் இடத்தை விற்பனை செய்ய விடாமல் சிலர் தடுத்து இடையூர்களை ஏற்படுத்தி வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இமாம் ஷாஃபி பள்ளி விவகாரம் குறித்து அதிமுக தகவல் தொழில்நுட்ப அணி மாநில செயலாளர் ராஜ் சத்யன் கருத்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டிருக்கும் டுவிட்டர் பதிவில் “அதிராம்பட்டினத்தில் திமுக செயலாளர் ராமகுணசேகரன் என்பவருக்கு துணைபோகும் பொருட்டு, சிறுபான்மையினக் கல்வி நிறுவனமான இமாம் ஷாஃபி (ரஹ்) பெண்கள் மேல்நிலைப்பள்ளியை காலி செய்ய நோட்டிஸ் ஒட்டி மிரட்டும் விடியா திமுக அரசின் அதிர்ச்சியளிக்கிறது.
சிறுபான்மையினர் தங்களுக்கான கல்வி நிறுவனங்களை அமைத்து நிர்வகிக்க இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 30வது சரத்து அவர்களுக்கு உரிமை வழங்கியுள்ள நிலையில், அதற்கு உதவ வேண்டிய அரசே இழுத்துமூட முனைவது கடும் கண்டனத்திற்குரியது.
புரட்சித்தமிழர் எடப்பாடியார் சிறுபான்மையினரை சந்திப்பதை பார்த்து பயத்தில் இருக்கும் ஸ்டாலின் அவர்களே- சிறுபான்மைக் காவலர் என்று சொல்லி ஆட்சிக்கு வந்த உங்கள் விடியா திமுக அரசு, சிறுபான்மையினர் கல்வி நிறுவனங்களை நடத்தும் விதம் இது தானா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.