கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளில் மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க நாடு முழுவதும் வரும் மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே பொதுமக்கள் ஒரே இடத்தில் கூட்டமாக சேரக்கூடாது என்பதற்காக சினிமா தியேட்டர்கள், வணிக வளாகங்கள், மார்க்கெட்டுகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. மேலும் மதுபானக்கடைகள், கள், சாராயக்கடைகளும் திறக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இருந்தபோதிலும் மதுவுக்கு பேர்போன புதுச்சேரி மாநிலத்தில் மூடப்பட்டிருக்கும் மதுபானக் கடைகளில் இருந்து சட்டவிரோதமாக மதுபானங்கள் எடுத்து வரப்பட்டு அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருவதாக தொடர்ச்சியாக புகார் வந்தது.
இதனை தடுக்க கலால் துறை துணை ஆணையர் தயாளன் தலைமையில் பறக்கும்படைகள் அமைக்கப்பட்டு, அனைத்து பகுதிகளிலும் ஆய்வு மேற்கொண்டு கள்ளத்தனமாக விற்பனை செய்யப்படும் மதுபானங்களை அதிரடியாக பறிமுதல் செய்து வருகின்றனர்.
மேலும் புதுச்சேரியில் உள்ள மொத்த மதுபான விற்பனை குடோன்கள், பார்கள், சில்லரை மதுபான கடைகளை கலால் துறையினர் தொடர்ந்து கண்காணித்து சீல் வைத்து, மதுபானங்களின் இருப்பு குறித்து கணக்கெடுத்து வருகின்றனர்.
இதுவரை புதுச்சேரி மாநிலத்தில் ஊரடங்கு உத்தரவை மீறி சட்டவிரோதமாக மதுபானங்களை விற்பனை செய்த 28 கடைகளின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் ரூபாய் 5 லட்சம் மதிப்புள்ள மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில் புதுச்சேரி நகரின் மையப் பகுதியான, மறைமலையடிகள் சாலையில் உள்ள தனியார் மதுபான குடோனின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் மதுபானங்களை திருடிச் சென்றுள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக ஒதியஞ்சாலை காவல்நிலைய போலீசாருக்கு புகார் அளித்ததின் பேரில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அங்கு பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தபோது, இரண்டு மர்ம நபர்கள் மதுபான குடோனின் பூட்டை உடைத்து, உள்ளே சென்று மதுபானங்களை திருடிச் சென்றது தெரியவந்தது.
இதனையடுத்து விசாரணை நடத்தியதில், குடோனுக்கு அருகாமையில் உள்ள கோவிந்தசாலை பகுதியை சேர்ந்த இரண்டு பேர், மதுபானங்களை திருடிச் சென்றது தெரியவந்தது. பின்னர் அவர்கள் இருவரையும் கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முதல்கட்ட விசாரணை ரூபாய் 10 ஆயிரம் மதிப்பிலான மதுபானங்களை அவர்கள் திருடியது தெரியவந்துள்ளது.