தமிழகத்தில் 14 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. தூத்துக்குடி, நெல்லை, திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு புதிய ஆட்சியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். தூத்துக்குடி ஆட்சியராக செந்தில்ராஜ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கந்தசாமி குறைதீர்ப்பு சிறப்பு அதிகாரியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். நெல்லை ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் சுகாதாரத்துறை இணை இயக்குனராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். நெல்லை மாவட்ட ஆட்சியராக விஷ்ணு நியமிக்கப்பட்டுள்ளார்.
தென்காசி கலெக்டர் அருண் சுந்தர் தயாளன், சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை இணைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். தென்காசி ஆட்சியராக சமீரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் வீரராகவராவ், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை இயக்குனராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். ராமநாதபுரம் ஆட்சியராக தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
சிவகங்கை மாவட்ட ஆட்சியராக மதுசூதனன் ரெட்டி நியமிக்கப்பட்டுள்ளார். இம்மாவட்ட கலெக்டரான ஜெயகாந்தன், தமிழ்நாடு மீன் வளர்ச்சிக் கழக இயக்குனர் மற்றும் வேளாண் இயக்குனராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியராக கிளாஸ்டன் புஷ்பராஜ் நியமிக்கப்பட்டுள்ளார்.