2023-ம் ஆண்டுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த 9ம் தேதி வெளியிடப்பட்டது. அதனை தொடர்ந்து வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்கம் செய்ய மற்றும் திருத்தங்கள் மேற்கொள்ள பொதுமக்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. இந்த விண்ணப்பங்கள் வரும் டிசம்பர் 8ம் தேதி வரை பெறப்படுகிறது.
இந்த நிலையில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் சிறப்பு முகாம் இன்றும், நாளையும் (ஞாயிற்றுக்கிழமை) 2 நாட்கள் நடக்கிறது. இதில் 18 வயது நிரம்பிய புதிய வாக்காளர்கள் மற்றும் வெளியூர்களில் இருந்து இடம் பெயர்ந்தவர்கள், வார்டுகளுக்குள் இடம் பெயர்ந்தவர்கள், பெயர் சேர்த்தல், நீக்கம் உள்ளிட்ட பணிகளுக்காக பொதுமக்கள் தங்கள் பகுதியில் உள்ள வாக்குச்சாவடி மையங்களுக்கு சென்று விண்ணப்பித்து பயன் பெறலாம்.
இந்நிலையில் தஞ்சை தெற்கு மாவட்ட திமுக பொருளாளர் எஸ்.எச்.அஸ்லம், தெற்கு ஒன்றியத்திற்குபட்ட முதல்சேரி, புதுக்கோட்டை உள்ளூர் உள்ளிட்ட ஊர்களில் நடைபெற்ற வாக்காளர் முகாமை நேரில் சென்று பார்வையிட்டார். அப்போது திமுக பூத் பொறுப்பாளர்களிடம் முகாமில் மக்களுக்கு செய்து கொடுக்கப்பட்டிருக்கும் ஏற்பாடுகள் குறித்து கேட்டறிந்தார்.
இதனிடையே https://www.nvsp.in/ மற்றும் https://voterportal.eci.gov.in/ ஆகிய இணையதள முகவரி மூலமாகவும் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம், ஆதார் எண் இணைத்தல் ஆகியவற்றை மேற்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.