கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை ஐஐடி-யில் படித்து வந்த கேரள மாணவி ஃபாத்திமா லத்தீப், அங்கு பணியாற்றிய பேராசிரியர்களின் மத ரீதியான தொந்தரவால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டார். அதன் நடுவே ஆறாத நிலையில், திருச்சியில் மற்றுமொரு மாணவி தற்கொலை செய்து கொண்டுள்ளது தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி கேகே நகர் அடுத்த கே.சாத்தனூர் பகுதியில் செயல்பட்டு வரும் கல்லூரி அய்மான் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி. இக்கல்லூரியில் ஏராளமான மாணவிகள் படித்து வருகிறார்கள். தமிழகம் மற்றும் பல்வேறு மாநில மாணவிகளும் படித்து வருகின்றனர்.
இதில் ஒருவர் ஜெப்ரா பர்வீன், இவர் ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியை சேர்ந்தவர். பி.எஸ்சி நியூட்ரிஷன் & டையட்டிக்ஸ் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இதற்காக இங்கிருக்கும் ஹாஸ்டலிலேயே ரூம் நம்பர் 100-ல் தங்கி உள்ளார்.
இந்த நிலையில், நேற்று காலை தன்னுடைய ரூமிலேயே தூக்கில் பிணமாக தொங்கி உள்ளார். இதை பார்த்து அலறி அடித்து கொண்டு ஓடிய சகமாணவிகள், கல்லூரி நிர்வாகத்துக்கு தகவல் தந்தனர். உடனடியாக போலீசாரும் விஷயம் அறிந்து விரைந்து வந்தனர். மாணவியின் சடலத்தை கைப்பற்றி விசாரணையும் மேற்கொண்டனர்.
தற்கொலை செய்துகொண்ட ஜெப்ரா பர்வீன், தன்னுடைய படிப்பு முழுவதையும் ஹிந்தியில்தான் படித்தாராம். இப்போது, திடீரென ஆங்கில வழியில் பாடம் நடத்துவதால், அதை சரிவர பர்வீனால் புரிந்து கொள்ள முடியாமல் திணறினாராம். அதனால் சரியாக படிக்காமலும் இருந்துள்ளார். மொழி புரியாமல் சிரமப்பட்டதாலேயே தற்கொலை வரை சென்றிருக்கலாம் என்று கல்லூரி நிர்வாகம் தரப்பு சொல்கிறது.
ஆனால், இதற்கு வேறு ஒரு காரணமும் சொல்லப்படுகிறது. ஹாஸ்டலில் யாரும் செல்போன் பயன்படுத்த கூடாதாம். ஆனால், பர்வீன் தன் பெற்றோரிடம் பேச செல்போனை மறைத்து வைத்து பேசியிருந்துள்ளார். இந்த விஷயம் வார்டனுக்கு தெரிந்ததும், அவர் பர்வீனை மோசமாக திட்டி, மற்ற மாணவிகள் முன்பு அவமானப்படுத்தி உள்ளதாகவும், வார்டன் தந்த டார்ச்சர் தாங்காமலேயே மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டதாகவும் மாணவிகள் தரப்பில் செய்திகள் வருகின்றன.
இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தமிழகத்தில் அடுத்தடுத்து கல்லூரி மாணவிகள் தற்கொலை செய்து கொள்வது பெரும் அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.