தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையின் விரிவாக்க பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து குமரெட்டியார்புரம் கிராம மக்கள் கடந்த 40 நாட்களுக்கும் மேலாக அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது தூத்துக்குடி மக்கள், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மாவட்டம் முழுவதும் பரவலாக போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். இதனிடையே ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி இந்திய மாணவர் சங்கத்தினர் நேற்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசு தொழிற்பயிற்சி நிலையம் எதிரே நேற்று பெய்த மழையையும் பொருட்படுத்தாமல் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் இந்திய மாணவர் சங்கம் சார்பில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மாணவர்களின் போராட்டம் இன்றும் தொடர்கிறது. வ.உ.சிதம்பரம் கல்லூரி முன்பாக மாணவர்கள் இந்த போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். அப்போது மாணவர்கள் பேசும் ‘எங்களுக்கு ஸ்டெர்லைட் ஆலை வேண்டாம். இயற்கை வளம் பாதிக்கப்படுகிறது’ என்றனர்.
முன்னதாக தூத்துக்குடி மக்களுக்கு ஆதரவாக பல்வேறு அரசியல் கட்சிகள் தங்கள் நிலைப்பாட்டை தெரிவித்துள்ளனர். திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், ஸ்டெர்லைட் ஆலையின் விரிவாக்கத்திற்கு எவ்வித அனுமதியும் வழங்கக்கூடாது என்றும், மண்ணுக்கும், மக்களுக்கும் ஸ்டெர்லைட் ஆலையால் தொடர்ந்து ஆபத்து நீடிக்குமேயானால், அந்த ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்திருந்தார். இதுதவிர வைகோ, தொல்.திருமாவளவன், வைகோ உள்ளிட்ட பல தலைவர்களும் தங்களது ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான தங்களது நிலைப்பாட்டை தெரிவித்துள்ளனர்.
SOURCE:-
Puthiyathalaimurai