தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணியளவில் வெளியாகின்றது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ் 2 பொதுத் தேர்வு மார்ச் 1-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 6-ம் தேதி முடிவடைந்தது. தமிழகம், புதுச்சேரியில் பள்ளி மாணவ, மாணவிகள், தனித்தேர்வர்கள் என 8 லட்சத்து 66 ஆயிரம் பேர் தேர்வு எழுதினர். இதன் விடைத்தாள் திருத்தும் பணி ஏப்ரல் 11-ம் தேதி தொடங்கி 30-ம் தேதி முடிவடைந்தது.
இதையடுத்து தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின்றன. சென்னை டிபிஐ வளாகத்தில் உள்ள அரசு தேர்வுத் துறையின் தலைமை அலுவலகத்தில் அதன் இயக்குநர் வசுந்தராதேவி, காலை 9.30 மணிக்கு தேர்வு முடிவுகளை வெளியிடுகிறார். தேர்வு முடிவு அதிகாரப்பூர்வமாக வெளியான சிறிது நேரத்தில் மாணவ, மாணவிகளின் செல் போன் எண்ணுக்கு மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகள் அனுப்பப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தேர்வு முடிவுகளை மாணவ, மாணவிகள் www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in ஆகிய இணையதளங்களில் தெரிந்து கொள்ளலாம். கடந்த ஆண்டை போல இந்த ஆண்டும் பிளஸ் 2 தேர்வு ரேங்க் பட்டியல் எதுவும் வெளியிடப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
1200-க்கு 1100-க்கு மேல் மதிப்பெண் பெற்றவர்கள் எத்தனை பேர், 1000-க்கு மேல் எடுத்தவர்கள் எத்தனை பேர் என்பது போன்ற விவரங்களும், பாடவாரியாக 200-க்கு 200 பெற்றவர்களின் எண்ணிக்கை விவரங்களும் மட்டுமே வெளியிடப்படவுள்ளது.