பெட்ரோல் மற்றும் டீசல் விலையை தினந்தோறும் நிர்ணயிக்கும் நடைமுறையால் கடந்த 15 நாட்களில் மிகப் பெரும் விலையேற்றத்தை அடைந்துள்ளது. மொத்தமாக இந்த 15 நாட்களில் பெட்ரோலின் விலை லிட்டருக்கு ரூ. 3.8-ம், டீசல் லிட்டர் ஒன்றுக்கு ரூ. 3.38 காசுகளும் உயர்ந்துள்ளது.
இந்த விலையேற்றங்கள் உள்ளூர் வரி அல்லது வாட் வரிக்கு ஏற்ப மாநிலத்துக்கு மாநிலம் மாறுபடுகிறது. மெட்ரோ மற்றும் மாநில தலைநகர்களிலேயே டெல்லியில்தான் பெட்ரோல் டீசல் விலை குறைவு ஆகும்.
எனினும் இன்றைய தினம் பெட்ரோல் டீசல் விலை குறைந்துள்ளது. எவ்வளவு என்று பார்த்தால் வெறும் ஒரு பைசா மட்டுமே. ஏறும் போது ரூபாயிலும், இறங்கும்போது பைசாவிலும் இறங்குவது வாடிக்கையாகவே உள்ளது.
இந்த விலையேற்றத்தால் மக்கள் துயரம் அடைந்து வரும் நிலையில் கேரள அரசோ பெட்ரோல் டீசல் விலையில் ரூ. 1 குறைக்கப்படும் என்று அறிவித்துள்ளது.
இதன் மூலம் பெட்ரோல் டீசல் விலையை குறைத்த முதல் மாநிலம் என்ற பெருமையை பெறுகிறது கேரளா.
இந்த விலை குறைப்பு வரும் வெள்ளிக்கிழமை அதாவது ஜூன்1-ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது என்று முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தார்.
அண்டை மாநிலமான கேரளாவில் பெட்ரோல் , டீசல் விலை குறைக்கப்பட்டுள்ளதை அடுத்து தமிழகத்திலும் பெட்ரோல் , டீசல் விலையை அரசு குறைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.