மருத்துவர், சென்னை மருத்துவப் பிரிவு செயலாளர், தமிழக பா.ஜ.க கட்சித் தலைவர் போன்ற பல பொறுப்புகளை வகித்த தமிழிசை சௌந்தரராஜனுக்கு, தற்போது மீண்டும் ஒரு பெரிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. கடந்த செப்டம்பர் 1-ம் தேதி, அவர் தெலங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டார். இந்த அறிவிப்புக்குப் பிறகு, அவர் வகித்துவந்த பா.ஜ.க தலைவர் மற்றும் பா.ஜ.க-வின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து ராஜினாமாசெய்தார்.
இந்நிலையில் இன்று, தெலங்கானா ஆளுநராகப் பதவியேற்றுக் கொண்டார், தமிழிசை. இவரின் பதவியேற்பு விழா ஹைதராபாத்தில் உள்ள ராஜ்பவனில் நடைபெற்றது. அம்மாநில உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ராகவேந்திரா எஸ். சவுகான், தமிழிசைக்கு பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.
இந்நிகழ்ச்சியில், தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார், ராதிகா சரத்குமார், தே.மு.தி.க பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் போன்ற பல முக்கியத் தலைவர்களும் தெலங்கானா மாநிலத்தின் அரசியல் தலைவர்கள் மற்றும் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
தான் ஆளுநராகப் பதவியேற்ற பிறகு, தன் தந்தை குமரி அனந்தன் காலில் விழுந்து வணங்கினார். தமிழிசை சௌந்தரராஜன், தெலங்கானாவின் ஆளுநராகப் பொறுப்பேற்றதால், அம்மாநிலத்தின் முதல் பெண் ஆளுநர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.