Saturday, September 13, 2025

மூன்றாம் கட்ட லாக்டவுன் : புதிய தளர்வுகள்.. தொடரும் தடைகள் – முழு விவரம் !

spot_imgspot_imgspot_imgspot_img

இந்தியா முழுவதும் சில தளர்வுகளுடன் ஊரடங்கு உத்தரவு மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டிக்கப்படுகிறது என மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று அறிவிப்பு வெளியிட்டது. இந்த நிலையில், தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பது தொடர்பான அமைச்சரவைக் கூட்டம் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று நடைபெற்றது. சுமார் இரண்டு மணிநேரத்துக்கு மேலாக நடந்த இந்தக்கூட்டத்தில் பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, ஊரடங்கை மே 17-ம் தேதி வரை நீட்டிப்பு செய்த மத்திய அரசின் முடிவை செயல்படுத்த இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் எந்தத் தளர்வும் கிடையாது.

ஆரஞ்சு பகுதிகளில் படிப்படியாக தளர்வு ஏற்படுத்தப்படும். சிறு குறு தொழில்கள் தொடங்க படிப்படியாக நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில், “இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் நோய்த் தொற்றைத் தடுப்பதற்காக தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், ஊரடங்கு உத்தரவு 25.3.2020 முதல் அமலில் இருந்து வருகிறது. வைரஸ் நோய்த் தொற்றை தடுப்பதற்காக மாநில பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், ஊரடங்கு உத்தரவு 4.5.2020 முதல் 17.5.2020 நள்ளிரவு 12.00 மணி வரை கீழ்க்காணும் வழிமுறைகளுடன் நீட்டிப்பு செய்யப்படுகிறது, நோய்க் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் (Containment Zone ) தற்போது உள்ள நடைமுறைகளின்படி, எந்தவிதமான தளர்வுகளும் இன்றி ஊரடங்கு கடைப்பிடிக்கப்படும்.

சென்னை காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கீழ்க்காணும் பணிகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படுகிறது : (நோய்க் கட்டுப்பாட்டு பகுதி தவிர)

◆கட்டுமானப் பணி நடைபெறும் இடத்திலேயே கட்டுமான தொழிலாளர்கள் இருக்கும் பட்சத்தில், அக்கட்டுமான பணிகள் அனுமதிக்கப்படும்.

◆அனைத்து அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் கட்டுமானப் பணிகள் மற்றும் சாலைப் பணிகள் அனுமதிக்கப்படும்.

◆சிறப்பு மண்டலங்கள், ஏற்றுமதி சார்ந்த தொழில் நிறுவனங்கள், ஏற்றுமதி நிறுவனங்கள் சென்னை மாநகராட்சி ஆணையர்/ மாவட்ட ஆட்சியர் ஆய்வுக்குப் பின், சூழ்நிலைக்கேற்ப, 25 சதவிகிதப் பணியாளர்களுடன் (குறைந்தது 20 நபர்கள்) செயல்பட அனுமதிக்கப்படும். நிறுவனம் ஏற்பாடு செய்யும் வாகனங்களில் மட்டுமே பணியாளர்கள் வர வேண்டும்.

◆ஐடி நிறுவனங்கள் 10 சதவிகிதப் பணியாளர்களைக் கொண்டு குறைந்தது 20 நபர்கள் செயல்பட அனுமதிக்கப்படும். நிறுவனம் ஏற்பாடு செய்யும் வாகனங்களில் மட்டுமே பணியாளர்கள் வர வேண்டும்.

◆அத்தியாவசியப் பொருள்கள் விற்பனை செய்யும் கடைகள், 6 மணி முதல் 5 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.

◆அத்தியாவசியப் பொருள்கள் வழங்கும் மின் வணிக நிறுவனங்கள் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட நேரங்களில் செயல்படலாம்.

◆உணவகங்களில் 6 மணி முதல் இரவு 9 மணி வரை, பார்சல் மட்டும் வழங்கலாம்.

◆அனைத்து தனிக் கடைகள் (முடி திருத்தகங்கள்/ அழகு நிலையங்கள்) தவிர ஹார்டுவேர், சிமென்ட், கட்டுமானப் பொருள்கள், சானிடரிவேர், எலெக்ட்ரிக்கல் பொருள்கள் விற்பனை செய்யும் தனிக் கடைகள், மொபைல் போன், கணிப்பொறி, வீட்டு உபயோகப் பொருள்கள், மின் மோட்டார், கண் கண்ணாடி விற்பனை மற்றும் பழுது நீக்குதல் உள்ளிட்ட தனிக்கடைகள், காலை 11 மணி முதல் 5 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.

◆பிளம்பர், எலெக்ட்ரீஷியன், ஏசி மெக்கானிக், தச்சர் உள்ளிட்ட சுயதிறன் பணியாளர்கள், சிறப்புத் தேவைகள் உள்ளோருக்கான உதவியாளர்கள் வீட்டுப் பணியாளர்கள் ஆகியோர், சென்னை மாநகராட்சி ஆணையர் / சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியரிடம் உரிய அனுமதி பெற்று பணிபுரிய அனுமதிக்கப்படுவர்.

சென்னை காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதி தவிர, தமிழ்நாட்டின் பிற பகுதிகளில் நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகள் தவிர (Except Containment Zone ) கீழ்க்காணும் பணிகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படுகிறது :

◆50 சதவிகிதப் பணியாளர்களைக் கொண்டு குறைந்தபட்சம் 20 நபர்கள் மாநகராட்சி மற்றும் நகராட்சிக்கு வெளியிலுள்ள பகுதிகளில், ஊரக மற்றும் பேரூராட்சிப் பகுதிகளில் உள்ள அனைத்துத் தொழிற்சாலைகள், ஜவுளித்துறை செயல்பட அனுமதிக்கப்படும்.

◆15,000-க்கும் மேற்பட்ட மக்கள் தொகை உள்ள பேரூராட்சிகளில் மட்டும், மாவட்ட ஆட்சியர் ஆய்வுசெய்து, சூழ்நிலைக்கேற்ப, ஜவுளித்துறை நிறுவனங்களை 50 சதவிகிதப் பணியாளர்களைக் கொண்டு செயல்பட அனுமதிக்கலாம்.

◆தொழிற் நகரியங்கள், தொழிற்பேட்டைகள் (ஊரகம், நகரம்): 50 சதவிகிதப் பணியாளர்களைக் கொண்டு செயல்பட அனுமதிக்கலாம். நகரப்பகுதிகளிலுள்ள தொழிற்பேட்டைகளில், ஜவுளித்துறை நிறுவனங்கள் இயங்க அனுமதி இல்லை.

◆நகரப்பகுதிகளில் உள்ள ஏற்றுமதி நிறுவனங்களை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்து சூழ்நிலைக்கேற்ப 50 சதவிகித பணியாளர்களைக் கொண்டு செயல்பட அனுமதிக்கப்படும்.

◆மின்னணு வன்பொருள் உற்பத்தி: 50 சதவிகித பணியாளர்களைக் கொண்டு செயல்பட அனுமதிக்கப்படும்.

◆கிராமப்புறங்களில் உள்ள ஒருங்கிணைந்த நூற்பாலைகள் ஷிஃப்ட் முறையில் தக்க சமூக இடைவெளியுடன் 50 சதவிகிதப் பணியாளர்களைக் கொண்டு செயல்பட அனுமதிக்கப்படும்.

◆நகரப்பகுதிகளில் உள்ள தோல் பொருள்கள் மற்றும் ஆடை ஏற்றுமதிக்கான டிசைனிங் மற்றும் சாம்பிள்கள் உருவாக்கம்: மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்து, 30 சதவிகித பணியாளர்களைக் கொண்டு செயல்பட அனுமதிக்கப்படும்.

◆தகவல் தொழில்நுட்பம் 50 சதவிகிதப் பணியாளர்கள், குறைந்தபட்சம் 20 நபர்களைக் கொண்டு செயல்பட அனுமதிக்கப்படும்.

◆நகர்ப்புறங்களில் கட்டுமானப் பணிகள்: பணியிடத்திலேயே பணியாளர்கள் இருந்தால் மட்டும் அனுமதிக்கப்படும்; பணியாளர்களை மட்டும் வேறு இடத்திலிருந்து அழைத்துவர அனுமதிக்கப்படும்.

◆அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் கட்டுமானப் பணிகள் மற்றும் சாலைப் பணிகள் அனுமதிக்கப்படும்.

◆பிளம்பர், எலெக்ட்ரீஷியன், ஏசி மெக்கானிக், தச்சர் உள்ளிட்ட சுயதிறன் பணியாளர்கள் அனைவரும் மாவட்ட ஆட்சியரிடம் உரிய அனுமதி பெற்ற பின்னர் அனுமதிக்கப்படுவர்.

◆மாற்றுத்திறனாளிகள், முதியோர், நோயாளிகள் ஆகியோரின் சிறப்புத் தேவைகளுக்கான உதவியாளர்கள், வீட்டுப் பணியாளர்கள் மாவட்ட ஆட்சியரிடம் உரிய அனுமதி பெற்று பணிபுரிய அனுமதிக்கப்படுவர்.

◆அச்சகங்கள் செயல்பட அனுமதிக்கப்படுகிறது.

◆கட்டுமானப் பணிகளுக்கு ஹார்டுவேர், சிமென்ட், கட்டுமானப் பொருள்கள், சானிடரிவேர், மின் விற்பனைக் கடைகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டும் செயல்பட அனுமதிக்கப்படும். கட்டுமானப் பொருள்களை எடுத்துச் செல்ல எந்தவிதத் தடையும் இல்லை.

◆மொபைல் போன், கணிப்பொறி, வீட்டு உபயோகப் பொருள்கள், மின் மோட்டார் ரிப்பேர், கண் கண்ணாடி விற்பனை மற்றும் பழுது நீக்குதல் உள்ளிட்ட அனைத்து தனிக்கடைகள், 10 முதல் 5 மணி வரை மட்டும் செயல்பட அனுமதிக்கப்படும்.

◆கிராமப்புறங்களில் உள்ள அனைத்து தனிக் கடைகள், 9 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டும் செயல்பட அனுமதிக்கப்பபடும்.

◆உணவகங்கள் 6 மணி முதல் இரவு 9 மணி வரை பார்சல் மட்டும் வழங்கலாம். மின் வணிக நிறுவனங்கள் ஏற்கெனவே அனுமதிக்கப்பட்டவாறு செயல்படலாம்.

◆நகராட்சி மற்றும் மாநகராட்சிகளில் உள்ள மால்கள் (Malls) மற்றும் வணிக வளாகங்கள் தவிர்த்து, அனைத்து தனிக்கடைகள், காலை 10 முதல் 5 மணி வரை மட்டும் செயல்பட மாவட்ட ஆட்சியர் சூழ்நிலைக்கேற்ப அனுமதிக்கலாம்.

பொது :

அனைத்து மாவட்ட ஆட்சியர்களும், மாநகராட்சி ஆணையர்களும் அரசால் அறிவுறுத்தப்பட்ட தனிநபர் இடைவெளியை பின்பற்றியும் கிருமிநாசினிகளைப் பயன்படுத்தியும், பணியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் பாதுகாப்பாக பணிபுரிவதைக் கண்காணிக்கவும், அரசால் வெளியிடப்பட்டுள்ள நிலையான செயல்பாட்டு நடைமுறைகளை (Standard Procedures) தீவிரமாகக் கடைப்பிடிப்பதை உறுதிசெய்யவும் அறிவுறுத்தப்படுகிறது.

ஊரடங்கு உத்தரவு தொடர்வதால், பொது இடங்களில், 5 நபர்களுக்கு மேல் மக்கள் கூடாமல் இருப்பதைக் கண்காணிக்கவும் அறிவுறுத்தப்படுகிறது. ஏற்கெனவே அரசால் அனுமதிக்கப்பட்ட அனைத்து தளர்வுகளும் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ள வேளாண்மைப் பணிகள், வேளாண் சார்ந்த தொழில்கள், தொழில் மற்றும் வணிக செயல்பாடுகளும், மருத்துவப் பணிகள் மற்றும் அத்தியாவசியப் பணிகளை மேற்கொள்ளும் துறைகள், வங்கிகள், அம்மா உணவகங்கள், ஏடிஎம்-கள், ஆதரவற்றோர் இல்லங்கள் ஆகியவை எவ்வித தங்குதடையின்றி தொடர்ந்து முழுமையாகச் செயல்படலாம்.

கனிமம் மற்றும் சுரங்கப் பணிகள், கட்டுமானப் பணிகளுக்கு பொருள்களை வழங்கும் செங்கல் சூளைகள், கல் குவாரிகள், எம்-சாண்ட், கிரஷர்கள் மற்றும் இவற்றுக்கான போக்குவரத்து ஆகியன செயல்படலாம். பெரும் தொழிற்சாலைகளும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களும், கட்டுமானப் பணிகளுக்கும், பணிகளைத் தொடங்க மாவட்ட ஆட்சியர்/பெருநகர சென்னை மாநகராட்சி ஆகியோரிடம் இணைய வழியில் விண்ணப்பித்து பணியாளர் மற்றும் வாகனங்களுக்கு அனுமதி சீட்டுகள் பெற வேண்டும்.

நகரப்பகுதிகளில் பணியாளர்களை நிறுவனங்கள் தாங்கள் இயக்கும் பிரத்யேக பேருந்துகள்/வேன்கள் மூலம் பணிக்கு அழைத்து வரலாம். அந்த வாகனங்களில் 50 சதவிகிதம் அளவுக்கு மட்டுமே தக்க தனிநபர் இடைவெளியைக் கடைப்பிடித்து பணியாளர்களை அழைத்து வர வேண்டும். சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் கிராமப்புற தொழில்கள் தனிக்கடைகள் ஆகியவை செயல்பட தனி அனுமதி தேவையில்லை.

ஏற்கெனவே நடைமுறையில் உள்ள கீழ்க்காணும் செயல்பாடுகளுக்கான தடைகள் மறு உத்தரவு வரும்வரை தொடர்ந்து அமலில் இருக்கும் :

◆பள்ளிகள், கல்லூரிகள், பயிற்சி நிறுவனங்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் அனைத்துக் கல்வி நிறுவனங்கள்.

◆வழிபாட்டுத் தலங்களில் பொதுமக்கள் வழிபாடு மற்றும் அனைத்து மதம் சார்ந்த கூட்டங்கள்.

◆திரையரங்குகள், கேளிக்கைக்கூடங்கள், மதுக்கூடங்கள், உடற்பயிற்சிக் கூடங்கள், கடற்கரை, சுற்றுலாத்தலங்கள், உயிரியல் பூங்காக்கள், அருங்காட்சியகங்கள், நீச்சல் குளங்கள், விளையாட்டு அரங்குகள், பெரிய அரங்குகள், கூட்ட அரங்குகள் போன்ற இடங்கள்.

◆அனைத்து வகையான சமய, சமுதாய, அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, கல்வி, கலாசார நிகழ்வுகள், விழாக்கள், கூட்டங்கள் மற்றும் ஊர்வலங்கள்.

◆பொது மக்களுக்கான விமான, ரயில், பொது பேருந்து போக்குவரத்து.

◆டாக்ஸி, ஆட்டோ, சைக்கிள் ரிக்க்ஷா.

◆மெட்ரோ ரயில், மாநிலங்களுக்கு இடையேயான பேருந்து போக்குவரத்து.

◆மாநிலங்களுக்கு இடையேயான பொது மக்கள் போக்குவரத்து.

◆தங்கும் விடுதிகள் (பணியாளர் விடுதிகள் தவிர), தங்கும் ஹோட்டல்கள், ரிசார்ட்டுகள்.

◆இறுதி ஊர்வலங்களில் 20 நபர்களுக்கு மேல் பங்கேற்கக் கூடாது.

◆திருமண நிகழ்ச்சிகளுக்கு, தற்போது உள்ள நடைமுறைகள் தொடரும்.

நோய்த் தொற்றின் பரவலை தமிழ்நாடு அரசு தொடர்ந்து கண்காணித்து வருகிறது. நோய்த் தொற்று குறையக் குறைய, தமிழ்நாடு அரசு மேலும் பல தளர்வுகளை அறிவிக்கும். கொரோனா வைரஸ் நோய்த் தொற்றின் தாக்கத்தை கட்டுப்படுத்த அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு பொது மக்கள் முழு ஆதரவையும், ஒத்துழைப்பையும் நல்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

பேராசிரியர் காதர் மொய்தீனுக்கு தமிழ்நாடு அரசின் ‘தகைசால் தமிழர்’ விருது அறிவிப்பு!

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் கே.எம்.காதர் மொய்தீனுக்கு தகைசால் தமிழர் விருதை தமிழக அரசு அறிவித்துள்ளது. அவருக்கு ரூபாய் 10...

அதிரையில் தென்னிந்திய AFFA கால்பந்து தொடர் : செமி ஃபைனலில் AFFA...

அதிரை ஃபிரண்ட்ஸ் ஃபுட்பால் அசோசியேஷன் சார்பில் தென்னிந்திய அளவிலான கால்பந்து தொடர் போட்டி AFWA மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்று நடைபெற்ற இரண்டாவது...

தமிழ்நாடு தலைமை காஜி முஃப்தி. சலாஹூதீன் முஹம்மது அயூப் வஃபாத்தானார்!

தமிழ்நாடு அரசின் தலைமை காஜியாக இருந்துவந்த மௌலவி. முஃப்தி. டாக்டர். சலாஹூதீன் முஹம்மது அய்யூப்(வயது 84) இன்று 24/05/2025 சனிக்கிழமை இரவு 9...
spot_imgspot_imgspot_imgspot_img