அதிமுக முன்னாள் அமைச்சர் கே சி வீரமணிக்கு எதிராக வழக்குப்பதிவு செய்த 24 மணி நேரத்தில், மின்னல் வேகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் தங்கள் சோதனையை தொடங்கியுள்ளனர்.
அதிமுக ஆட்சியில் ஊழல் செய்த அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுப்போம் எனத் தேர்தல் பரப்புரையில் அறிவித்தவாறே மாஜி அமைச்சர்கள் மீதான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன.
முதலில் எம்.ஆர். விஜயபாஸ்கர், எஸ் பி வேலுமணி ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் ரெய்டு நடத்தப்பட்ட நிலையில், இப்போது முன்னாள் அமைச்சர் கே.சி. வீரமணிக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
கே.சி. வீரமணிக்கு சொந்தமான வீடு, கல்லூரி, திருமண மண்டபம் அவருடன் நெருக்கமாக உள்ள அதிமுக நிர்வாகிகளுக்குச் சொந்தமான இடங்கள் என மொத்தம் 28 ரெய்டு நடைபெற்று வருகிறது. சென்னையில் 4 இடங்கள், திருப்பத்தூர் 15 இடங்கள், கிருஷ்ணகிரி, சென்னை, திருவண்ணாமலை, பெங்களூரு உள்ளிட்ட 28 இடங்களிலும் இன்று காலை 6.30 மணிக்கு ரெய்டு தொடங்கியுள்ளது.
அறப்போர் இயக்கம் அளித்த புகாரின் அடிப்படையிலேயே இந்த சோதனை நடைபெறுவதாகக் கூறப்படுகிறது. அதிமுக ஆட்சியில் வணிக வரித்துறை மற்றும் பத்திரப்பதிவு துறை அமைச்சராக இருந்த கே.சி. வீரமணி, கடந்த 2016 முதல் 2021 வரையிலான காலகட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாகப் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த காலகட்டத்தில் அவர் வருமானத்திற்கு அதிகமாக 654% சொத்துக்களைச் சேர்த்துள்ளதாகப் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த புகாரை வேலூரில் உள்ள லஞ்ச ஒழிப்புத் துறையினர் பதிவு செய்துள்ளனர். முதல் தகவல் அறிக்கையின்படி போலீசாருக்கு நேற்று காலை 11 மணியளவில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. லஞ்ச ஒழிப்புத் துறையினர் சற்றும் தாமதமின்றி 3 மணிக்கு வழக்குப்பதிவு செய்துள்ளனர். 2011ஆம் ஆண்டு 7 கோடியாக இருந்த அவரது சொத்து மதிப்பு 10 ஆண்டுகளில் 90 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. 10 ஆண்டுகளில் பல மடங்கு அவரது சொத்து மதிப்பு அதிகரித்துள்ளது.
கே.சி. வீரமணிக்கு எதிராகப் புகார் பெற்ற நான்கே மணி நேரத்தில் வழக்குப்பதிவு செய்த போலீசார், மின்னல் வேகத்தில் இன்று காலை சத்தமில்லாமல் ரெய்டை தொடங்கிவிட்டனர். காலை 6.30 மணிக்குத் தொடங்கிய ரெய்டு இன்னும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. புகார் அளிக்கப்பட்டது முதல் ரெய்டு வரை அனைத்து தகவல்களும் மிகவும் ரகசியமாக வைக்கப்பட்டது. எந்த இடத்திலும் ரெய்டு தொடர்பான தகவல் லீக் ஆகவில்லை என்பதால், ரெய்டு தொடங்கி 3 நேரம் கடந்த பின்னரும் பெரியளவில் அதிமுக நிர்வாகிகள் ரெய்டு நடக்கும் இடங்களை முற்றுகையிடவில்லை.
மேலும், கே.சி. வீரமணி அப்போது திருப்பத்தூரில் உள்ள வீட்டிலேயே இருக்கிறார் எனத் தகவல் வெளியாகியுள்ளது. அதிகாலையிலேயே ரெய்டு தொடங்கிவிட்டதாலும், ரெய்டு தகவல் லீக் ஆகவில்லை என்பதாலும் அவரால் வெளியே எங்கும் செல்ல முடியவில்லை எனக் கூறப்படுகிறது. முன்னதாக எஸ்.பி. வேலுமணிக்கு சொந்தமான இடங்களில் ரெய்டு நடைபெற்ற போது, சட்டப்பேரவை அலுவல ஆய்வுக்குழு கூட்டத்தில் கலந்துகொள்ள அவர் சென்னை வந்திருந்தார். ரெய்டு குறித்த தகவல் கிடைத்ததும் சத்தமே இல்லாமல் அவர் சட்டமன்ற உறுப்பினர் விடுதிக்கு வந்து இருந்தது குறிப்பிடத்தக்கது.