கொரோனா பெருந்தொற்றால் தஞ்சை மாவட்டம் பேராவூரணி பகுதியில் தொடர் கொரோனா இறப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களை தன்னார்வத்துடன் ஜாதி மத பேதமின்றி நல்லடக்கம் செய்து வரும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்ட நிர்வாகிகள் மற்றும் கிளை நிர்வாகிகளை பேராவூரணி சட்டமன்றத் தொகுதி திமுக எம்எல்ஏ அசோக்குமார் நேற்று நேரில் அழைத்து பாராட்டினார்.
அப்போது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பினர் ஆவணம் பெரியநாயகி புரம் பகுதியில் வீடு வீடாக சென்று ஆக்ஸிஜன் பரிசோதனை செய்ததையும் ஊக்கப்படுத்தி பேசினார். மேலும் என்ன ஒத்துழைப்பு தேவை என்றாலும் என்னை தொடர்புகொள்ளுங்கள் செய்து தருகிறேன் என்று எம்எல்ஏ அசோக்குமார் உறுதி கூறினார்.
இச்சந்திப்பில் TNTJ தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் அதிரை ராஜிக் அவர்கள் நல்லடக்கம் செய்யும் போது ஏற்படும் தரமற்ற சேப்டி கிட், மின்விளக்கு போன்ற சங்கடங்களை எடுத்துக்கூறி நிவர்த்தி செய்து தருமாறு கூறினார். இந்நிகழ்வில் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் மல்லிப்பட்டிணம், ஆவணம், சேதுபாவாசத்திரம், பேராவூரணி கிளை நிர்வாகிகள் உடனிருந்தனர்.