தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சி ஆவணங்களில் தொடர்ச்சியாக பிழையான தகவல்களும் எழுத்துப்பிழைகளும் அதிகளவில் தென்படுகிறது. குறிப்பாக ரூ.4.42கோடி மதிப்பிலான டெண்டர் ஆவணத்தில் தஞ்சாவூர் மாவட்டத்தை மதுரை மாவட்டம் என குறிப்பிட்டது சமீபத்தில் பேசும் பொருளானது. இந்நிலையில் தற்போது அதிரை வீதிகளில் வைக்கப்பட்டு வரும் பெயர் பலகைகளில் செந்தமிழ் சின்னாபின்னமாகி வருகிறது.
பெயர் பலகைகளில் இடம்பெற கூடிய வார்டு எண் என்பதற்கு பதிலாக வார்டு ஏண் என எழுதி பொதுமக்களை குழப்பமடைய செய்திருக்கிறது நகராட்சி. அதாவது வார்டு எதற்கு (ஏன்?) என அதிரை நகராட்சி கேள்வி எழுப்பும் வகையில் அந்த பெயர் பலகைகள் இருப்பதாக மக்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர். சமீபகாலமாக அதிரை நகராட்சி நிர்வாகம் சரிவர இயங்காததின் வெளிப்பாடே இத்தகைய பிழைகளுக்கு காரணம் என்று வேதனை தெரிவிக்கும் பொதுமக்கள், உடனடியாக இந்த விவகாரத்தில் மாவட்ட ஆட்சியர் தலையிட்டு கவனக்குறைவால் அரசுக்கு அவப்பெயர் ஏற்படுவதற்கு முன் தகுதிவாய்ந்த அலுவலர்களை அதிரை நகராட்சியில் பணியமர்த்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.