சென்னை விமான நிலையத்தில் ஓடுபாதையில் 2 அடிக்கு தண்ணீர் தேங்கியுள்ளது. இதன் காரணமாக சென்னை விமான நிலையம் நாளை காலை 9 மணி வரை மூடப்பட்டுள்ளதுடன், 150 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
வங்கக்கடலில் உருவான
மிக்ஜாம் புயல் நாளை முற்பகல் ஆந்திர கடலோர பகுதியில் கரையை கடக்கிறது. இது சென்னைக்கு அருகில் வந்து செல்வதால், நேற்று முதலே சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் இடைவிடாமல் அதி கனமழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது .
இந்நிலையில் மிக்ஜாம் புயல் காரணமாக காற்றின் வேகம் அதிகமாக இருக்கிறது. மேலும் சென்னை விமான நிலைய ஓடுபாதையில் 2 அடிக்கு மேல் தண்ணீர் தேங்கியுள்ளது. இதன் காரணமாக நாளை செவ்வாய்கிழமை காலை 9 மணி வரை விமான நிலையம் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
விமான நிலையத்திற்கு பயணிகள், சரக்கு, தனி, ஏர் ஆம்புலன்ஸ் உள்ளிட்ட எந்த வகையிலான விமானங்களும் வருவதற்கு அனுமதி இல்லை என்று இந்திய விமான அதிகார ஆணையம் (ஏஏஐ) தெரிவித்துள்ளது. 30 விமானங்கள் திருச்சி, ஐதராபாத், பெங்களூரு உள்ளிட்ட நகரங்களுக்கு திருப்பி விடப்பட்டன. சுமார் 150 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
மேலும் சென்னை விமான நிலைய விமான ஓடுதளத்தில் மழைநீர் தேங்கியிருக்கும் காட்சிகள் சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளன. இதன் காரணமாக விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதால் விமான நிலையத்துக்கு வருவதற்கு முன்பாக பயணிகள் தங்கள் விமான சேவை குறித்து உறுதி செய்துகொள்ளுமாறு, விமான நிறுவனங்கள் அறிவுறுத்தியுள்ளன.