தமிழ்நாடு அரசின் சேவைகள் விரைவாக, எளிதாக மக்களை சென்றடையவும், நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையை ஏற்படுத்தவும் ‘மக்களுடன் முதல்வர்’ என்ற திட்டம் கடந்த 18ம் தேதி முதலமைச்சர் மு.க. ஸ்டாலினால் தொடங்கி வைக்கப்பட்டது.
இத்திட்டத்தின் மூலம் தமிழகம் முழுவதும் சிறப்பு முகாம்கள் வார்டு வாரியாக பிரித்து நடத்தப்பட்டு, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, மின்சாரத்துறை, வருவாய்துறை, காவல்துறை, மாற்றுத்திறனாளிகள் துறை, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை, சமூக பாதுகாப்புத்துறை, கூட்டுறவுத்துறை, ஆதிதிராவிடர் நலத்துறை, தாட்கோ, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை ஆகிய துறைகளின் கீழ் பெறப்படும் பல்வேறு கோரிக்கைகளுக்கு தீர்வு அளிக்கப்படுகிறது.
அதன்படி தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில் ‘மக்களுடன் முதல்வர்’ திட்ட முகாம் கடந்த திங்கட்கிழமை முதல் காவல் நிலையம் எதிரே உள்ள செல்லியம்மன் கோவில் சமுதாயக்கூடத்தில் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற நான்காம் நாள் முகாமில் 19,20,21,22,23,24 ஆகிய வார்டுகளைச் சேர்ந்த பொதுமக்கள் பலர் தங்களுடைய கோரிக்கைகளை முகாமில் கலந்துகொண்டு தெரிவித்தனர்.
அதிராம்பட்டினம் நகராட்சிக்கு உட்பட்ட வார்டுகள் வாரியாக தினமும் நடைபெறும் ‘மக்களுடன் muthaovar’ முகாமில் பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக பங்கேற்று அரசு சார்ந்த தங்களது தேவைகளை கோரிக்கையாக அதிகாரிகளிடம் அளித்து செல்கின்றனர். மேலும் இம்முகாமில் நகர திமுக செயலாளரும், நகரமன்ற துணைத்தலைவருமான இராம. குணசேகரன், திமுக நகர அவைத் தலைவர் சபீர் அஹமது, நகரமன்ற உறுப்பினர்கள் P.G.T. செய்யது முஹம்மது, S.S.M.G. பசூல்கான் உட்பட நகரமன்ற உறுப்பினர்கள் பலர் பங்கேற்றனர்.