கஜா புயலின் காரணமாக அதிராம்பட்டினத்தில் தற்போது காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. தாழ்வான பகுதிகளில் இருந்த மக்கள், அரசின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட புயல் பாதுகாப்பு மையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் அதிராம்பட்டினம் இளைஞர்கள் சிலர் கடும் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான அடிப்படை பொருட்களை வாங்குவதற்கு அதிராம்பட்டினம் பேரூராட்சி அலுவலகம் சென்றுள்ளனர். ஆனால் அங்கு அவர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருந்தது.
ஏனெனில் புயல் பாதிப்புக்குள்ளான அனைத்து ஊர்களும் புயல் தொடர்பான மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் நிலையில் அதிராம்பட்டினம் பேரூராட்சி நிர்வாகமோ அலுவலகத்தை பெரிய பூட்டை போட்டு பூட்டி வைத்துவிட்டனர். இதில் வேடிக்கையான விஷயம் என்னவென்றால் கடந்த இரு நாட்களாக அதிராம்பட்டினம் பேரூராட்சி சார்பில் பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக ஊடகங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டே வந்தது. மேலும் பேரூராட்சி அலுவலகத்தின் முகப்பிலும் மீட்பு பொருட்கள் எல்லாம் அடுக்கி வைத்திருந்தனர்.
அதிராம்பட்டினத்தில் இன்று கூட மாவட்ட ஆட்சியர் வந்து நேரில் ஆய்வு செய்துவிட்டு சென்ற நிலையில், அதிராம்பட்டினம் பேரூராட்சி நிர்வாகம் இவ்வாறு செயல்படுவது மக்கள் மத்தியில் கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் மாவட்ட ஆட்சியர் இவ்விவகாரத்தில் தலையிட்டு சம்மந்தப்பட்டவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
தமிழக அரசு இந்த கஜா புயல் விஷயத்தில் தமிழகம் முழுவதும் தீவிரமாக நடவடிக்கை எடுத்துவரும் நிலையில், அதிரை பேரூராட்சி மட்டும் இவ்வாறு அலுவலகத்தை பூட்டி வைத்து உறங்குவது ஏன் ?