தந்தி டிவியில் இருந்து அதன் செய்தி ஆசிரியர் ரங்கராஜ் பாண்டே ராஜினாமா செய்துள்ளார். இன்று மாலை அவர் ராஜினாமா செய்ததாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் வெளியானது. சமூக வலைத்தளங்களிலும் கூட அவரது ராஜினாமா பெரிய அளவில் பேசப்பட்டது. இது குறித்து விசாரித்த போது அந்த தகவல் உண்மை என தகவல் கிடைத்துள்ளது.
தந்தி டிவியில் கடந்த 8 ஆண்டுகளாக தலைமை செய்தி ஆசிரியர் பதவியில் பாண்டே இருந்து வந்தார். ஒன்றுமில்லாமல் கிடந்த சேனலை பாண்டேவுக்காக பார்த்தவர்கள்தான் அதிகம். குறிப்பாக அவர் நடத்தும் ஆயுத எழுத்து விவாதத்திற்கு அதிக பார்வையாளர்கள் கிடைத்தனர். மேலும் அவரது கேள்விக்கென்ன பதில் தமிழகம் தாண்டியும் பிரபலம்
ஆனால் நாளடைவில் பாண்டே பாஜகவின் ஆதரவாளர் என்ற கருத்தும் வைக்கப்பட்டது. அவரது நடவடிக்கைகள் கூட அப்படியே இருந்தன. இது ஒருபுறம் இருக்க, பாண்டே பின்பற்றுவது தந்தி நிர்வாகத்தின் போக்கு என்றும் தனிப்பட்ட முறையில் அவர் யாரையும் ஆதரிக்கவில்லை எனவும் தெரிந்தது. குறிப்பாக ஆளும் கட்சிக்கு சலாம் போட்டு, எதிர்கட்சியை போட்டுத் தாக்குவது.
நாளடைவில் பாஜகவின் முகமாகவும் ,தமிழ் விரோத செயலில் பாண்டே ஈடுபடுவதாக கூட அவர் மீது குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்நிலையில் ஆயுத எழுத்து நிகழ்ச்சியை விட்டு வேறு நிகழ்ச்சிகளில் கவனம் செலுத்தினார். குறிப்பாக மக்கள் மன்றம் நிகழ்ச்சி. இதனால் ஹரிஹரன், அசோகவர்ஷனி ஆகியோர் தங்களை நிரூபிக்க வாய்ப்பு கிடைத்தது. அதனை பாண்டேவும் ஆதரித்தார்.
கடந்த ஆண்டு திடீரென பாண்டே ராஜினாமா செய்ததாக கூட தகவல் வெளியானது. ஆனால் அது உடனடியாக திரும்பப் பெறப்பட்டது. இந்நிலையில் பாண்டே இன்று அதிகாரப்பூர்வமாக தந்தி தொலைக்காட்சியில் இருந்து வெளியேறினார். அடுத்த செய்தி ஆசிரியர் யார் என்ற கேள்வி தற்போது எழுந்திருக்கிறது. பாண்டே என்ன செய்யப் போகிறார் என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது.