வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இடம்பெற்றுள்ளது. அதன்படி திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு மதுரை, திண்டுக்கல் ஆகிய தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு கூட்டம் இன்று (15.03.2024) சென்னையில் மாநில செயற்குழு உறுப்பினர் எஸ். நூர்முகமது தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன், மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் பி. சம்பத், உ. வாசுகி, பெ. சண்முகம் மற்றும் மாநில செயற்குழு, மாநிலக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் மதுரை, திண்டுக்கல் ஆகிய தொகுதிகளில் போட்டியிட இருக்கும் வேட்பாளர்கள் முடிவு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டனர்.
அதன்படி மதுரை நாடாளுமன்றத் தொகுதியில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினரும், எழுத்தாளரும், தற்போதைய மதுரை நாடாளுமன்ற உறுப்பினருமான சாகித்ய அகாதெமி விருது பபெற்ற தோழர் சு.வெங்கடேசன் எம்.பி-யும், திண்டுக்கல் நாடாளுமன்றத் தொகுதியில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினரும், திண்டுக்கல் மாவட்டச் செயலாளருமான தோழர் ஆர்.சச்சிதானந்தமும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.