கேரளாவில் தென்மேற்கு பருவ மழை தீவிரமாக பெய்துவருவதால் கேரளா மாநிலமே வெள்ளத்தில் மூழ்கி சிக்கித் தவிக்கிறது. வெள்ளத்திலும் நிலச்சரிவிலும் சிக்கி 300க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். 2 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வீடுகளை இழந்து அரசின் வெள்ள நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள கேரளாவிற்கு இந்தியா மட்டுமின்றி அரபு நாடுகளிலிருந்தும் உதவிகள் வருகின்றன. சமீபத்தில் கூட கேரள வெள்ளத்திற்கு தனியாக குழு அமைக்க ஐக்கிய அரபு அமீரக அரசு உத்தரவிட்டது.
இந்நிலையில் , கத்தார் நாட்டு அரசு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்காக ரூ.35 கோடியை அளிப்பதாக அறிவித்துள்ளது. மேலும் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல்களையும் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக கத்தார் நாட்டு பிரதமர் அப்துல்லா பி நசீர் பின் கலீபா அல் தானி தனது டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிடுகையில், இளவரசர் அமீர் ஷேக் தமிம் பின் ஹமத் அல் தானி வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்காக 50 லட்சம் அமெரிக்க டாலர்கள் நிவாரணமாக அறிவித்துள்ளார். (அதாவது இந்திய ரூபாயில் ரூ.35கோடி) வெள்ளத்திலும் , மழையிலும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு கத்தார் அரசு சார்பில் ஆறுதல்களையும் , இரங்கலையும் தெரிவிக்கிறோம். கத்தார் நாட்டின் வளர்ச்சிக்கும் , மேம்பாட்டுக்கும் உதவியாக இருந்த மக்கள் விரைவில் நலம் பெற வாழ்த்துகிறோம் எனத் தெரிவித்துள்ளார்.