ரியாத்: சவுதி அரேபியா மீது ஹவுதி போராளி குழுக்கள் நடத்திய தாக்குதல் காரணமாக அங்கு தற்போது மொத்தமாக 50% கச்சா எண்ணெய் உற்பத்தி பாதிக்கப்பட்டு இருக்கிறது.
கடந்த 2011ல் இருந்து ஏமன் நாட்டில் தீவிரமான போர் நடந்து வருகிறது. அரபு வசந்தத்திற்கு பிறகு ஏமன் நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. அங்கு அதிபராக இருந் அலி அப்துல்லா சாலே பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.
அதோடு துணை அதிபராக இருந்த அப்ராபுத் மன்சூர் ஹாதி ஆட்சிக்கு வந்தார். இதில் இருந்து தொடங்கிய போர்தான் இன்னும் அங்கு நடந்து வருகிறது.
அங்கு தற்போது ஆட்சியானது சன்னி முஸ்லீம் மக்களால் நடத்தப்படுகிறது. இதனால் ஷியா பிரிவு மக்கள் ஆட்சிக்கு எதிராக கொந்தளித்தனர். இவர்கள்தான் ஹவுதி புரட்சி படைகள் என்று அழைக்கப்படுகின்றனர். இவர்கள் முன்னாள் அதிபர் அலி அப்துல்லா சாலேவிற்கு ஆதரவாக இருக்கிறார்கள்.
ஹவுதி போர் குழு ஒன்றாக சேர்ந்து அலி அப்துல்லா சாலேவை மீண்டும் ஆட்சியில் அமர்த்த திட்டமிட்டு போர் செய்து வருகிறது. இவர்கள் ஷியா என்பதால் இன்னொரு ஷியா நாடான ஈரான் இவர்களுக்கு உதவியாக போர் கருவிகளை வழங்கி வருகிறது.
இந்த நிலையில் ஏமன் அதிபர் அப்ராபுத் மன்சூர் ஹாதிக்கு ஆதரவாக சன்னி முஸ்லீம் நாடான சவுதி மற்றும் மற்ற அரபு நாடுகள் களமிறங்கி உள்ளது. இதில் அமெரிக்கா சவுதியின் பக்கம் இருக்கிறது. இதுதான் சவுதியில் உள்ள எண்ணெய் கிணறுகள் மீது தாக்குதல் நடப்பதற்கு காரணம் ஆகும்.
இந்த நிலையில் நேற்று சவுதியில் உள்ள அராம்கோ எண்ணெய் நிறுவனத்தின் கச்சா எண்ணெய் உற்பத்தி மையங்களான அப்குவாய்க், குராய்ஸ் ஆகிய கிணறுகளில் ஹவுதி படை டிரோன் மூலம் தாக்குதல் நடத்தியது. இதனால் அங்கு பெரிய வெடிப்பு ஏற்பட்டது. ஆனால் இதில் யாரும் பலியாகவில்லை.
இதனால் அப்குவாய்க், குராய்ஸ் ஆகிய கிணறுகளின் எண்ணெய் உற்பத்தி மொத்தமாக நிறுத்தப்பட்டு உள்ளது. ஆகவே தற்போது சவுதியின் எண்ணெய் உற்பத்தி 50% மொத்தமாக குறைந்துள்ளது.
உலக நாடுகளை இந்த தாக்குதல் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. ஈரான்தான் இந்த தாக்குதலுக்கு காரணம் என்று அமெரிக்கா குற்றஞ்சாட்டி உள்ளது. ஏற்கனவே பொருளாதார மந்தநிலை இந்தியாவில் நிலவி வரும் நிலையில், இந்த தாக்குதலால் இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை பல மடங்கு அதிகரிக்கும் என்று பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.