தமிழக அரசு விரைவு போக்குவரத்து கழகமான, எஸ்.இ.டி.சி., பஸ்களின் கட்டணத்தை குறைப்பது குறித்து, அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.
எஸ்.இ.டி.சி.,யில், 1,000த்துக்கும் மேற்பட்ட பஸ்கள் உள்ளன. இவை, தமிழகம் மட்டுமின்றி, ஆந்திரா, கேரளா, கர்நாடகா மற்றும் புதுச்சேரிக்கும் இயக்கப்படுகின்றன. அதனால் தினமும், 1.8 கோடி ரூபாய் வரை வருவாய் கிடைத்தது. ஜன., 20 முதல், அரசு விரைவு பஸ்களின் கட்டணம், ஆம்னி பஸ்களுக்கு இணையாக உயர்த்தப்பட்டது.
இதன் காரணமாக, குடும்பத்துடன் வெளியூர் செல்வோர், ரயில், வாடகை கார்களை தேர்ந்தெடுத்தனர். கட்டண உயர்வால், தினமும் ஒரு கோடி ரூபாய் கூட வசூலாகாத நிலை ஏற்பட்டது. எனவே, கோடை விடுமுறையை கருத்தில் கொண்டும், பயணியரை தக்க வைத்துக்கொள்ளவும், கட்டணத்தை சற்று குறைக்க, அதிகாரிகள் ஆலோசனை நடத்தியுள்ளனர்.
கோடை காலத்தில் பயணியர் வருகை அதிகரிக்கும்; வருவாயும் கூடும் என்பதால், கட்டணத்தை குறைக்க அரசுக்கு பரிந்துரைத்துள்ளனர். விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது.