வன்முறை கும்பல் தாக்குதலில் தப்ரேஸ் அன்சாரி இறக்கவில்லை என ஜார்க்கண்ட் போலீசார் தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் கடந்த ஜூன் 17ம் தேதி பைக் ஒன்றை திருடியதாக பொய் குற்றச்சாட்டு கூறி தப்ரேஸ் அன்சாரி என்ற இஸ்லாமிய இளைஞரை இந்துத்துவ கும்பல் ஒன்று கட்டி வைத்து கடுமையாக தாக்கியது. மேலும் ஜெய் ஸ்ரீராம், ஜெய் அனுமான் என்கிற முழக்கங்களை கூறுமாறும், அந்த கும்பல் கொடூரமாக தாக்கியது.
இத்தாக்குதலை தொடர்ந்து சில நாட்களில், தப்ரேஸ் அன்சாரி உயிரிழந்தார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி, நாட்டையே பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
தப்ரேஸ் அன்சாரியின் மரணத்திற்கு நீதி கேட்டு நாடு முழுவதும் போராட்டங்கள் நடத்தப்பட்டன. இதையடுத்து தாக்குதல் நடத்திய 11 குண்டர்களை ஜார்க்கண்ட் போலீசார் கைது செய்து கொலை வழக்கு பதிவு செய்தனர். இந்நிலையில் தப்ரேஸ் அன்சாரி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 11 குண்டர்கள் மீதான கொலை வழக்கு திரும்ப பெறப்பட்டுள்ளது.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ஜார்க்கண்ட் போலீசார், பிரேத பரிசோதனையில் தப்ரேஸ் அன்சாரி மாரடைப்பால் உயிரிழந்துள்ளதாக முடிவு வந்துள்ளது என்றும் இதனால் அந்த 11 பேர் மீதான வழக்குகள் கைவிடப்பட்டன என்றும் தெரிவித்துள்ளனர்.
நாட்டையே உலுக்கிய கொடூர சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் மீதான குற்றச்சாட்டு கைவிடப்பட்டுள்ளது, பொதுமக்கள் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.