கொரோனாவை ஒழிக்க பாபிஜி அப்பளத்தை அறிமுகம் செய்த பாஜக மத்திய அமைச்சருக்கே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா உலகம் முழுவதும் ருத்திரத்தாண்டவம் ஆடி வருகிறது. உலகம் முழுவதும் கொரோனாவால் முடங்கி இருக்கும் நிலையில் பலர் இதனை பயன்படுத்தி பலரும் விதவிதமான பொருட்களை விற்பனை செய்து வருகின்றனர். அதன் படி இந்தியாவில் பதஞ்சலி நிறுவனம் கொரோனா மருந்தை வெளியிட்டது. இதற்கு மத்திய அமைச்சகம் கண்டனம் தெரிவித்தது. மேலும் சென்னை உயர்நீதிமன்றமும் அபராதம் விதித்தது.
இந்நிலையில், கடந்த மாதம் இந்தியாவின் நாடாளுமன்ற விவகாரங்கள் மற்றும் கனரக தொழில்துறை இணை அமைச்சராக உள்ள அர்ஜுன் ராம் மேக்வால், ராஜஸ்தான் நிறுவனம் தயாரித்துள்ள ‘பாபிஜி பப்பட்’ என்னும் அப்பளம் ஒன்றை அறிமுகம் செய்து வைத்தார்.
இதையடுத்து பாபிஜி அப்பளத்தை பிரபலப்படுத்தி காணொளி வெளியிட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால், “ஆத்மநிர்பர் பாரத் திட்டத்தின் கீழ், ஒரு உற்பத்தியாளர் ‘பாபிஜி அப்பளம்’ என்ற பெயரில் அப்பள நிறுவனம் தொடங்கியுள்ளார். இது கொரோனா வைரஸை எதிர்த்துப் போராடுவதற்கு மிகவும் உதவியாக இருக்கும். அவர்களுக்கு என் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். அவர்கள் வெற்றி பெறுவார்கள் என நம்புகிறேன்” எனத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் மத்திய இணை அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வாலுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இது தொடர்பான அவரது ட்விட்டர் பதிவில், எனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. எனது உடல் நிலை சீராக உள்ளது. மருத்துவர்களின் பரிந்துரையின் பேரில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளேன் என்று கூறியுள்ளார்.