சந்திர கிரகணம், பிளட் மூன் மற்றும் சூப்பர் மூன் ஆகிய மூன்று வானியல் அதிசயங்கள் இன்று ஒரே நாளில் நிகழ உள்ளன.
நாட்டில் சில பகுதிகளில் சந்திர கிரகணத்தை இன்று காண முடியும் என மத்திய புவி அறிவியல் அமைச்சகம் தெரிவித்துள்ளது. இன்று மூன்று வானியல் அதிசயங்கள் ஒரே நாளில் நிகழவுள்ளன.
சந்திர கிரகணம் குறித்து மத்திய புவி அறிவியல் அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், “பகுதியளவு சந்திர கிரகணத்தை நாட்டில் சில பகுதிகளில் இன்று (புதன்கிழமை) காண முடியும். இன்று மாலை சந்திரன் உதயமானதும் சிறிது நேரத்துக்கு பகுதியளவு சந்திர கிரகணத்தை, சிக்கிம் தவிர்த்து வடகிழக்குப் பகுதிகள், மேற்கு வங்க மாநிலத்தின் சில பகுதிகள், ஒடிசாவின் சில கடற்கரைப் பகுதிகள் மற்றும் அந்தமான் நிகோபர் தீவுகளில் காணலாம்.
சந்திர கிரகணம் மாலை 3.15 மணிக்குத் தொடங்கி 6.23 மணிக்கு முடியும். அதேநேரம் முழு சூரிய கிரகணம் மாலை 4.39 மணிக்குத் தொடங்கும். அதை தென் அமெரிக்கா, வட அமெரிக்கா, ஆசியாவின் சில நாடுகள், ஆஸ்திரேலியா, பசிபிக் மற்றும் இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் காணமுடியும்.
இன்று ஏற்படும் சந்திர கிரகணத்துக்குப் பின் இந்தியாவில் அடுத்த சந்திர கிரகணத்தை இந்த ஆண்டு நவம்பர் 19ஆம் தேதி காணலாம்.
நடப்பாண்டில் முதல் முழு சந்திர கிரகணம், பிளட் மூன் (Blood moon) மற்றும் சூப்பர் மூன் ஆகிய 3 வானியல் அதிசயங்கள் ஒரே நாளில் நிகழவுள்ளன. சூரியன், பூமி, சந்திரன் ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் வரும்போது பூமியின் நிழல் சந்திரன் மீது விழுவதே சந்திர கிரகணம் ஆகும். இன்று நிகழவுள்ள முழு சந்திர கிரகணத்தை, கிழக்கு ஆசியா, ஆஸ்திரேலியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் பார்க்கலாம் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்
பூமியின் சுற்றுவட்டப்பாதைக்கு அருகே நிலவு வரும்போது, வழக்கத்தைவிட, சற்று பெரியதாக தெரிவதையே சூப்பர் மூன் என அழைக்கிறோம். சந்திர கிரகணத்தின்போது, நிலவு ரத்தச் சிவப்பு நிறத்தில் வழக்கத்தைவிட பிரகாசமாக காட்சி அளிக்கும். இந்நிகழ்வை பிளட் மூன் என்பார்கள். இவை மூன்றும் இன்று ஒரே நாளில் நிகழவுள்ளன.