அன்று மாலை வழக்கம்போல் வீட்டில் இருக்க மனம் இல்லாததால் 2 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் தனது மகளின் வீட்டிற்கு நடந்தே சென்றார் அந்த முதியவர். போகின்ற வழியில் பேரனுக்கு கிரீம் பிஸ்கட் பிடிக்கும் என நினைத்த அவர் கடையில் ஒரு பிஸ்கட் பாக்கெட் வாங்கிக்கொண்டு நடையை தொடர்ந்தார்.
தாத்தாவுக்கு அவரின் மனைவிக்கு அடுத்து மிகவும் பிடித்தவர் யார் என்றால் 4 வயது பேரன் தான். அதற்கு ஏற்றார்போல் பேரனும் தாத்தாவை கண்டதும் ஓடிவந்து இறுக்கிக் கட்டிக்கொள்வான். இந்த பாசத்திற்காகவே மதிக்காத மகள் வீட்டிற்கு தினமும் சென்றுவருவார் அந்த முதியவர்.
மிகவும் வயதாகிவிட்டதால் உடலில் பலம் இல்லை. இதன் காரணமாக சாலையின் ஓரத்தில் கால்களை மெல்ல நகர்த்தி நடந்தார் அந்த தாத்தா. திடீரென எங்கிருந்தோ வந்த பைக் தாத்தாவின் மீது மோதியது. இதில் நிலைத்தடுமாறிய தாத்தா இரண்டு சுற்றுச்சுற்றி கீழே இருந்த கல்லில் தலை அடிப்பட்டு துடித்துடித்தார். அவரின் கையிலிருந்த பிஸ்கட் பாக்கெட் தூக்கி வீசப்பட்டது. பேரனின் பாசத்தை தேடிச்சென்ற தாத்தா மரணத்தை அடைந்தார்.
உடனே சம்பவம் நிகழ்ந்த இடத்தில் கூட்டம் குவியத் தொடங்கியது. தாத்தா இறந்ததை உறுதி செய்துக்கொண்ட அங்கிருந்த ஒரு மருத்துவர், பைக்கை ஓட்டிவந்தது யாரென கேட்ட அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ஆம், இருசக்கர வாகனத்தை கண்மூடித்தனமாக ஓட்டிவந்து முதியவரின் உயிர்போக காரணமாக இருந்தது 15 வயதை ஒத்த இரண்டு சிறுவர்கள்.
இதில் ஒருவன் சம்பவ இடத்திலேயே வாழ்க்கையை முடித்துக்கொண்டுவிட்டான். மற்றொருவன் மட்டும் கால் முறிந்து வலியில் கத்திக்கொண்டிருந்தான். இறுதியில் ஆம்புலன்ஸ் வந்து காயமடைந்தவனை மருத்துவமனைக்கு கொண்டு சென்றது. இறந்தவர்களின் உடல்களை பிரேத பரிசோதனைக்காக தூக்கி சென்றனர். இதேநிலை தான் தினமும் தொடர்கிறது.
சமீபகாலமாக அதிரையில் நிகழக்கூடிய விபத்துக்கள் இதேபோன்ற பாணியில் இருப்பது தான் நமக்கு பேரதிர்ச்சியான தகவல். பணம் சம்பாதிக்காத சிறுவர்களால் ஒரு பைக்கை காசுக் கொடுத்து வாங்க முடியாது. அதனால் பெற்றோர்களின் பக்கம் தங்களின் பார்வையை திருப்பி பைக் வாங்கி கேட்டுப் போர் தொடுக்கின்றனர் சிறார்கள்.
பெற்றோரும் மகன் மனம் பாதிக்கப்பட கூடாது என நினைத்து விலை உயர்ந்த பைக்கை வாங்கி கொடுத்துவிடுகின்றனர்.
முடிவு அநியாயமான உயிர்பலிகள். இவ்வாறு ஏற்பட கூடிய உயிர்பலிகளுக்கு யார் காரணம்? கொலை செய்ய கத்தி எடுத்து கொடுத்தது குற்றம் என்றால்… அதிகமாக விபத்தில் சிக்கும் சிறார்களுக்கு பைக் வாங்கி கொடுக்கும் பெற்றோர் தானே குற்றவாளிகள்? உரிய லைசன்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டும் சிறார்களுக்கு தண்டனை வழங்குவதைவிட அதற்கு வழிவகையை ஏற்படுத்தி கொடுக்கும் பெற்றோரை தண்டிக்க சட்டத்தில் திருத்தம் செய்யப்படுமா? காத்திருப்போம் காலமே பதில் சொல்லும்…
-ஜெ.முகம்மது சாலிஹ்