தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில் சொத்து வரி, குடிநீர் இணைப்பு உள்ளிட்டவற்றில் அதிகளவில் குளறுபடி நடப்பதாக சொல்லப்படுகிறது. மாட்டு சாணியின் மேல் வெள்ளை அடிப்பது, சாதாரன சாணி விழுந்ததற்கே புதிய தார்சாலை சேதமடைவது என சாணியால் புகழின் உச்சிக்கு சென்று கொண்டிருக்கும் அதிராம்பட்டினம் நகராட்சிக்கு தற்போது மற்றொரு புகழ் வந்துசேர்ந்திருக்கிறது. அதன்படி ரூ. 4.42கோடி மதிப்பிலான மெகா ஒப்பந்த புள்ளி ஆவணத்தின் 35வது பக்கத்தில் அதிராம்பட்டினத்தை மதுரை மாவட்டம் என குறிப்பிட்டு டெல்டாக்காரனை மதுரைக்காரனாக மாற்றியுள்ளனர் நகராட்சி அலுவலர்கள்.
அதிராம்பட்டினம் என்பது தஞ்சாவூர் மாவட்டம் என சிறு பிள்ளைகளுக்கு தெரிந்தது கூட அரசு பணியில் இருக்கும் நகராட்சி அலுவலர்களுக்கு தெரியாமல் போனது வியப்பாக உள்ளது. இந்த குளறுபடியை சாதாரணமாக கடந்து சென்றுவிட முடியாது. ஏனெனில் ரூ. 4.42கோடி மதிப்பிலான மெகா திட்டத்தின் தரம் மற்றும் மதிப்பீடு சரியானதா? அல்லது அதில் ஏதும் முறைகேடுகள் நடந்துள்ளதா? என்கிற சந்தேகமும் எழுகிறது.
கடந்த ஏப்ரலில் ரூ.28லட்சம் மதிப்பிலான கட்டிடம் கட்டும் பணிக்கான டெண்டரில் அதிராம்பட்டினம் நகராட்சி ஆணையர் கையொப்பமிட வேண்டிய இடத்தில் பட்டுக்கோட்டை நகராட்சி ஆணையர் என குறிப்பிடப்பட்டிருந்தது சர்ச்சையான சூழலில் இந்தமுறை அதிராம்பட்டினம் மதுரை மாவட்டத்தில் இருப்பதாக நகராட்சி அலுவலர்கள் எழுதி இருப்பது அவர்களின் பணித்திறனை கேள்விக்குறியாக்கியுள்ளது.