அதிரையில் சமீபகாலமாக இரவுநேரத்தில் அடிக்கடி அறிவிக்கப்படாத மின் தடை ஏற்படுகிறது. இதனால் இரவுநேர தூக்கத்தை தொலைக்கும் அதிரை மக்கள், கோடைக்காலத்தில் நிம்மதியின்றி பரிதவிக்கும் சூழல் உள்ளது.
இந்நிலையில் அடிக்கடி மின் தடை ஏற்படுத்தி மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி போராட தூண்ட வேண்டாம் என்று இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கின் அதிரை நகர செயலாளர் வழக்கறிஞர் Z.முகம்மது தம்பி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அறிக்கை வெளியிட்டிருக்கும் அவர், தமிழ்நாட்டில் திராவிட மாடல் ஆட்சி மிக சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதனிடையே அதிரை நகரில் நிகழும் அறிவிக்கப்படாத மின் தடை, மின்சார வாரிய அலுவலக தொலைப்பேசி எண்ணை மக்கள் தொடர்புக்கொண்டால் அதை ஏற்க மறுப்பது உள்ளிட்டவை மூலம் சிறப்பான ஆட்சிக்கு அதிகாரிகள் சிலர் களங்கம் ஏற்படுத்த முயற்சிப்பதாக தெரிகிறது. இந்த விவகாரத்தில் மின்சார வாரிய உயர் அதிகாரிகள் தலையிட்டு உடனடியாக பிரச்சனைக்கான தீர்வை காண்பதுடன் தவறிழைக்கும் பணியாளர்கள் மீது துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வழக்கறிஞர் முகம்மது தம்பி வலியுறுத்தியுள்ளார். மேலும் இந்த விவகாரத்தில் அலட்சியமாக இருந்துவிட வேண்டாம் என சுட்டிக் காட்டும் அவர், அதிரை மக்களிடையே கொந்தளிப்பை உருவாக்கி போராட தூண்ட வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளார்.