தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியின் தற்போதைய அலுவலகம் பேருந்து நிலையம் அருகில் செயல்பட்டு வருகிறது. கட்டி முடிக்கப்பட்டு 17 ஆண்டுகள் மட்டுமே ஆன இந்த சிமெண்ட் கான்கிரீட் அலுவலகத்தில் தற்போது இடம்பற்றாக்குறை இருப்பதால் வேறொரு இடத்தில் தமிழ்நாடு அரசின் ரூ.3.5கோடி பங்களிப்புடன் நகராட்சியின் ரூ.1.5கோடியையும் சேர்த்து மொத்தம் ரூ.5கோடி மதிப்பீட்டில் புதிதாக நகராட்சி அலுவலகம் கட்ட முடிவு செய்திருக்கிறார்கள்.
இந்நிலையில் கைவிடப்பட இருக்கும் அதிரை நகராட்சியின் பழைய அலுவலகத்திற்கு உட்கட்டமைப்பை காரணம் காட்டி ரூ. 29.5லட்சம் செலவு செய்திருப்பது பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது. இதில் புதிய மன்ற கூடம், குளுகுளு ஏ.சி, நகராட்சி தலைவருக்கு பிரத்யேக கழிவறை உள்ளிட்ட நிரந்த கட்டமைப்பிற்கான செலவீனங்களும் அடங்கும். அதிரை நகராட்சிக்குட்பட்ட பல வார்டுகளில் நிதி பற்றாக்குறையை காரணம் காட்டி அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்படாமல் கிடப்பில் போடப்பட்டிருக்கும் சூழலில் கைவிடப்பட இருக்கும் நகராட்சி கட்டிடத்திற்கு ரூ.29.5லட்சத்தை அவசர அவசரமாக செலவு செய்திருப்பது பொதுமக்களிடையே பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.