புதுடெல்லி(23 ஜன 2018): ஹாதியாவின் திருமண வாழ்க்கையில் தலையிட முடியாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கேரள மாநிலத்தை சேர்ந்தவர் கே.எம்.அசோகன் என்பவரது மகள் அகிலா இவர் முஸ்லிம் மதத்திற்கு மாறி ஹாதியா என்று தன் பெயரை மாற்றிக் கொண்டார். மேலும் ஷபின் ஜகான் என்பவரை திருமணமும் செய்துகொண்டார். ஆனால் லவ் ஜிஹாத் என்ற குற்றச்சாட்டை வைத்து கேரள உயர் நீதிமன்றம் இந்த திருமணத்தை ரத்து செய்தது. இதனை அடுத்து அவர் பெற்றோரின் கண்காணிப்பில் வீட்டுச் சிறையில் இருந்தார்.
இதையடுத்து சுப்ரீம் கோர்ட்டில் ஹாதியாவின் கணவர் ஷபின் ஜகான் கேரள நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்தார். இவ்வழக்கில் ஹாதியாவிடம் நேரடியாக விசாரணை மேற்கொண்ட உச்ச நீதிமன்றம் ஹாதியாவை பெற்றோரிடமிருந்து மீட்டு அவரது மருத்துவ படிப்பை தொடர ஒப்புதல் அளித்தது.
தற்போது கோவை சித்த மருத்துவ கல்லூரியில் கல்வியை தொடர்ந்து வருகிறார் ஹாதியா.
இந்நிலையில் ஹாதியாவின் வழக்கை மீண்டும் விசாரித்த உச்ச நீதிமன்றம், ஹாதியாவி திருமண வாழ்க்கையில் தலையிட முடியாது என்று தெரிவித்து விட்டது. அது அவரது உரிமை என்றும், மேஜெர் பெண்ணான ஹாதியாவே அவரது திருமண வாழ்க்கை குறித்து முடிவெடுப்பார் என்றும் தெரிவித்துவிட்டது.
மேலும் கேரள நீதிமன்ற உத்தரவு குறித்து மட்டுமே விசாரணை மேற்கொள்ள முடியும் என்றும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார்.
என்.ஐ.ஏ.ஆவணங்கள் அடங்கிய கோப்பை ஹாதியாவின் தந்தை சார்பில் உச்ச நீதிமன்றாத்தில் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில் இந்த உத்தரவை உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.
இவ்வழக்கின் மறு விசாரணை வரும் பிப்ரவரி 22 ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.
source innearm