மனிதநேய மக்கள் கட்சியின் அரசமைப்புச் சட்ட பாதுகாப்பு மாநாடு நேற்று (07-10-2018) ஞியாயிற்றுக்கிழமை திருச்சியில் நடைபெற்றது. இந்த மாநாட்டிற்கு தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் இருந்து தமுமுக, மமக தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் என பல்லாயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இம் மாநாட்டில் முதலாவது நிகழ்ச்சியாக சமூகநீதி மாணவர் இயக்கம் சார்பாக மாணவச் சமூகம் எழுகவே என்கிற தலைப்பில் கருத்தரங்கம் காலை 10 மணிக்கு நடைபெற்றது. இக் கருத்தரங்கிற்கு
இக் கருத்தரங்கிற்கு S.நூர்தீன் தலைமை வகிக்க, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் பேரா.அருணன், சென்னை உயர்நீதி மன்ற வழக்கறிஞர் ஹென்றி டிபேன், முனைவர் பேரா. J.ஹாஜாகனி ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
இதனைத் தொடர்ந்து மதியம் 12.30 மணிக்கு நடைபெற்ற காஞ்சி மக்கள் மன்றத்தின் சார்பாக வீர வரலாற்று நிகழ்ச்சியில், இஸ்லாமியர்கள் இந்திய விடுதலைக்காக பாடுபட்டதையும், திப்பு சுல்தானின் வீரத்தையும் பறைசாற்றும் வகையில் பாடல்களோடு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
இதன் பின்னர் மதியம் 3.30 மணியளவில் மனிதநேயம் வாழ்வதற்க்கும் , மதவாதம் வீழ்வதற்க்கும் மமக இளைஞர் அணியின் அணிவகுப்பு நிகழ்ச்சியும், தொடர்ந்து புதுவை பூபாலனின் “கோமாளி ராஜாவும், கோல்மால் மந்திரிகளும்” என்ற நகைச்சுவை நிகழ்ச்சி நடைபெற்றது.
மாலை 4 மணிக்கு சமுதாய அரங்கத்தில் கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கம் இனிகோ இருதயராஜ், அய்யாவழி சமயத் தலைவர் குருமகா சன்னிதானம் பாலபிரஜாபதி அடிகளார் உள்ளிட்டோர் தொகுப்புரை வழங்கினர்.
இதனிடையே முத்தமிழ் அறிஞர் மறைந்த கலைஞர் அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாக சமூகநீதி குறுந்தகடு வெளியிடப்பட்டு, அதனை திமுகவின் கே.என்.நேரு பெற்றுகொண்டார்.
இதனையடுத்து மாலை 6.45 மணிக்கு அரசமைப்புச் சட்ட பாதுகாப்பு மாநாடு துவங்கியது. இம் மாநாட்டிற்கு மமக மாநிலத் தலைவர் முனைவர் பேரா. M.H. ஜவாஹிருல்லாஹ் தலைமை வகிக்க, தமுமுக பொதுச் செயலாளர் S.ஹைதர் அலி, மமக பொதுச் செயலாளர் P.அப்துல் சமது ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
இம் மாநாட்டில் விசிக தலைவர் தொல்.திருமாவளவன் பேசுகையில், இந்திய விடுதலைக்கு பாடுபட்டதில் இஸ்லாமியர்களின் பங்கு பெரும்பங்காக உள்ளது என்றும், RSS அமைப்பு இந்திய விடுதலைக்காக எதுவும் செயல்படுத்தவில்லை என்றும் இந்தியா – பாகிஸ்தான் பிரிந்து போனதற்கு முழுமுதற் காரணம் RSS தானே அன்றி முஹம்மது அலி ஜின்னா அல்ல என்பதை எடுத்துரைத்தார்.
புதுச்சேரி முதலமைச்சர் V.நாராயணசாமி பேசும் போது, சமத்துவம், சகோதரத்துவம் தான் இந்தியாவின் மூச்சு. இதை உடைக்க நினைக்கும் எந்த சக்தியையும் ஆள விடாமல் ஒரே குறிக்கோளுடன் மத சார்பற்ற சக்திகளுடன் ஒன்றிணைந்து மதவாத பாஜக அரசை வீழ்த்த தயாராகுவோம் என்றார்.
இதன் பின்னர் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசியத் தலைவர் பேரா.காதிர் முஹைதீன், திமுகவின் துணைப் பொதுச்செயலாளர் V.P. துரைசாமி, திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் K.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலளார் இரா.முத்தரசன், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநிலத் தலைவர் S.திருநாவுக்கரசர் ஆகியோர் இந்திய அரசமைப்புச் சட்டத்தை மாற்றியமைக்க துடிக்கும் மத்திய பாஜக அரசையும், பாஜகவிற்கு துணை போகும் தமிழக அரசையும் மதசார்பற்ற கட்சிகளோடு ஒன்றிணைந்து தேர்தல் களத்தில் வீழ்த்துவோம் என்று கூறினர்.
முன்னதாக மமக மாநில பொருளாளர் கோவை.இ.உமர் வரவேற்புரையும், மமக மாநில துணைப் பொதுச்செயலாளர் தாம்பரம் M.யாக்கூப் தொகுப்புரையும் வழங்கினர்.
இறுதியாக மமக மாநிலத் தலைவர் பேரா. M.H. ஜவாஹிருல்லாஹ் பேசுகையில், பாரதத்தின் புதிய அரசமைப்புச் சட்டத்தில் பாரதிய பண்பாடு குறித்து எதுவும் இல்லை பிரிட்டன், அமெரிக்கா, கனடா மற்றும் இன்னபிற நாடுகளின் அரசமைப்புச் சட்டங்கள் கலவையாக தான் அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கியுள்ளார்கள் என்றார்.
இம் மாநாட்டில் மத நம்பிக்கைகளை புண்படுத்தும் தீர்ப்புகள், பறிக்கப்பட்ட பாபரி பள்ளி நிலத்தை முஸ்லிம்களிடம் ஒப்படைக்க வேண்டும், காஷ்மீர் மக்களின் சுயாட்சி உரிமைக்கு அரசியல் சாசன பாதுகாப்பு வழங்கும் 35 A 370 பிரிவுகளை நீக்க கூடாது எனவும், UAPA சட்டத்தை உடனடியாக திரும்ப பெற வேண்டும், முத்தலாக் அவசர சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என்பது உள்ளிட்ட 25 தீர்மானங்கள் முன் வைக்கப்பட்டது.
இறுதியாக மமக துணைப் பொதுச்செயலாளர் K. முஹம்மது கவுஸ் நன்றியுரை கூறினார்.
குறிப்பு: மமகவின் இந்த அரசமைப்புச் சட்ட பாதுகாப்பு மாநாட்டை நமது ‘அதிரை எக்ஸ்பிரஸ்’ தொடர் நேரலை செய்தது குறிப்பிடத்தக்கது.