ஆந்திராவில் ஒரே நாளில் ஒரு லட்சத்து 26 ஆயிரத்து 728 பேருக்கு அரசுப்பணி வழங்கி அம்மாநில முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி புதிய வரலாற்றை படைத்துள்ளார்.
ஆந்திர முதல்வராக ஜெகன் மோகன் ரெட்டி பதவியேற்றது முதல் பல்வேறு அதிரடி நடவடிக்களை மேற்கொண்டு வருகிறார். தொழிற்சாலை மற்றும் நிறுவனங்களில் உள்ள வேலைவாய்ப்புகளில் 75 சதவிகிதத்தை ஆந்திர மக்களுக்கே தர வேண்டும் எனக் கூறினார். மேலும், சட்டமன்றத் தேர்தலின் போது அவர் அளித்த வாக்குறுதிகளில் முக்கியமானது வேலைவாய்ப்பை உருவாக்குதல். அதனை நிறைவேற்றும் வகையில் நேற்று ஒரே நாளில் ஒன்றே கால் லட்சம் பேரை நிரந்தர ஆந்திர அரசு ஊழியர்களாக பணியமர்த்தியுள்ளார்.
இது நாட்டிலேயே முதன்முறையாக நடைபெற்ற வரலாற்று நிகழ்வு என ஒ.எஸ்.ஆர்.காங்கிரஸ் நிர்வாகிகள் கொண்டாடி தீர்க்கின்றனர். டிசம்பர் மாதம் முதல் ஆந்திரா முழுவதும் கிராமச்செயலகம், வார்டுச்செயலகம் தொடங்கப்பட உள்ளது. அந்தச் செயலகங்களில் பணியாற்ற படித்த இளைஞர்களை, இளம்பெண்களை அரசு ஊழியர்களாக்கி பணியமர்த்தியுள்ளார்.
மொத்தம் 21 லட்சம் பேர் அந்தப் பணிகளுக்கு விண்ணப்பித்திருந்த நிலையில் ஒரு லட்சத்து 98 ஆயிரம் பேர் மட்டும் எழுத்துத் தேர்வில் தேர்வாகினர். அதில் முதற்கட்டமாக ஒரு லட்சத்து 26 ஆயிரத்து 728 பேருக்கு மட்டும் பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன. மீதமிருக்கும் 72,000 பேருக்கும் விரைவில் பணி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
11,000 கிராமச் செயலகங்களும், 3,700 வார்டுச்செயலகங்களும் தொடங்கப்படவுள்ளதால் ஒவ்வொரு செயலகத்திலும் 10 ஊழியர்கள் வீதம் பணியமர்த்தப்பட உள்ளனர். மேலும், இது தொடர்பாக பணி நியமன ஆணைகளை வழங்கும் விழாவில் பேசிய ஜெகன், கிராமமக்களுக்கு உதவும் வகையில் தொடங்கப்படும் செயலகங்களில் பணிபுரிபவர்கள், வேலையாக நினைக்காமல் சேவையாக நினைத்து பணியாற்ற வேண்டும் என்றும், புதிதாக பணியமர்த்தப்பட்டவர்களின் செயல்பாடுகள் மாவட்ட நிர்வாகம் மூலம் கண்காணிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.