உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா என்னும் கொடிய வைரஸ், இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை. கொரோனாவின் பரவல் காரணமாக மத்திய அரசு மே 3ம் தேதி வரை நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது.
கொரோனா தொற்று பரவாமல் இருக்க மக்கள் வீடுகளிலேயே இருக்க வேண்டும் என்று அரசு அறிவுறுத்தியுள்ளது. பொதுமக்களும் அதனையேற்று வீட்டிலேயே முடங்கி உள்ளனர். அதுசமயம் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் மதியம் 1 மணி வரை பல்வேறு கட்டுப்பாடுகளுடன் கூடிய அனுமதியை வழங்கி உள்ளது.
அதிராம்பட்டினத்தில் சுமார் முப்பதாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். தற்போது ஊரடங்கு உத்தரவால் தொழில்கள் ஏதும் இன்றி மக்கள் தங்கள் வீடுகளிலேயே முடங்கி உள்ளனர். வேலைகள் ஏதும் இல்லாததால் மக்கள் அன்றாட தேவைகளுக்கு தங்களின் வங்கி சேமிப்பு பணத்தையே நம்பி இருக்கின்றனர்.
அவ்வாறு சேமிப்பு பணத்தை எடுத்து அன்றாட செலவிற்கு பயன்படுத்தலாம் என ஏடிஎம் மையங்களுக்கு செல்பவர்களுக்கு கிடைப்பது ஏமாற்றம் மட்டுமே. ஏனெனில் கடந்த சில நாட்களாக அதிரையில் உள்ள பல்வேறு ஏடிஎம்-களில் பணம் எடுக்க செல்பவர்களுக்கு ஏடிஎம் இயந்திரத்திலிருந்து பணம் வருவதில்லை. மாறாக ‘நோ கேஷ்’ என்ற பதில் தான் ஏடிஎம் இயந்திரத்திலிருந்து கிடைக்கிறது.
அத்தியாவசிய பொருட்கள் வாங்க அரசு குறிப்பிட்ட நேரம் அனுமதி அளித்திருந்தாலும் பணமின்றி பொருட்களை எவ்வாறு வாங்க முடியும் என பொதுமக்கள் புலம்பி தவிக்கின்றனர்.
ரூ. 500, 1000 எடுக்கக்கூடவா வங்கிக்குச் செல்ல வேண்டும் ? என பலர் ஆதங்கப்படுகின்றனர். அதுமட்டுமின்றி மருத்துவம் உள்ளிட்ட அடிப்படை தேவைக்குக் கூட ஏடிஎம்-களில் பணம் எடுக்க முடியாமல் மக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
அதிரையில் 5க்கும் மேற்பட்ட ஏடிஎம்கள் இருந்தும் அவசர காலத்தில் பயனளிக்கவில்லை என்பதே பலருடைய கருத்து. கொரோனா தடுப்பில் அரசு பல்வேறு நடவடிக்கைகளும், மக்களுக்கு பல்வேறு சலுகைகளும் வழங்கியுள்ளது. இருந்தபோதிலும் அத்தியாவசிய தேவையான ஏடிஎம்-கள் 24 மணி நேரமும் பணமுடன் இருக்க அரசும், சம்மந்தப்பட்ட வங்கி நிர்வாகங்களும் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அதிரையர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது!