சென்னையில் கொரோனா தீவிரமாக பரவி வரும் நிலையில் தற்போது கொரோனா தடுப்பு குழுவின் சிறப்பு முதன்மை அதிகாரியாக ஐஏஎஸ் அதிகாரி ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை மாநகராட்சிக்கு கொரோனா தடுப்பு பணியில் இவர் முக்கியமான ஆலோசனைகளை வழங்குவார்.
சென்னையில் கடந்த 4 நாட்களாக கொரோனா மிக மோசமாக அதிகரித்து வருகிறது. சென்னையில் எப்படி கொரோனாவை கட்டுப்படுத்துவது என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது.
சென்னையில் 176 பேருக்கு இன்று கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு மொத்தம் 1082 பேருக்கு இதுவரை கொரோனா ஏற்பட்டுள்ளது. சென்னையில் இன்றுதான் அதிகமாக 3600 பேருக்கு கொரோனா சோதனைகள் செய்யப்பட்டுள்ளது .
சென்னையில் கொரோனா தீவிரமாக பரவி வரும் நிலையில் தற்போது கொரோனா தடுப்பு குழுவின் சிறப்பு முதன்மை அதிகாரியாக ஐஏஎஸ் அதிகாரி ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை மாநகராட்சிக்கு கொரோனா தடுப்பு பணியில் இவர் முக்கியமான ஆலோசனைகளை வழங்குவார். தமிழக தலைமை செயலாளர் சண்முகம் இதற்கான அறிவிப்பை இன்று வெளியிட்டார். ஐஏஎஸ் அதிகாரி ராதாகிருஷ்ணன் முன்னாள் சுகாதாரத்துறை செயலாளர் என்பது குறிப்பிடத்தக்கது.
சுகாதாரத்துறையில் இவருக்கு 6 வருட அனுபவம் இருப்பதால் இவர் தற்போது களமிறக்கப்பட்டுள்ளார். 1992ம் ஆண்டு பேட்சை சேர்ந்த அதிகாரி இவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஐஏஎஸ் அதிகாரிகளின் குழுவிற்கு இடையே இவருக்கு பேரிடர் தடுப்பு ஹீரோ என்றும் பெயர் இருக்கிறது. அந்த அளவிற்கு தமிழகத்தில் பல்வேறு பேரிடரின் போது இவர் மக்களுக்காக உதவி இருக்கிறார். 2004ல் சுனாமி தாக்கிய போது இவர் செய்த பணி பாராட்டப்பட்டது .
அப்போது நாகப்பட்டினம் மற்றும் கடலூரில் மக்களை காத்து, அவர்களை முகாம்களிலும் தங்க வைத்து பலரின் உயிரை காப்பாற்றினார்.சென்னையில் சுனாமி வந்த போதும் இவர் உதவிக்காக அழைக்கப்பட்டு பணிகளை மேற்கொண்டார். அதேபோல் 2004 கும்பகோணத்தில் பள்ளி தீ விபத்து ஏற்பட்டு 94 குழந்தைகள் பலியான போதும் அதை இவர்தான் எதிர்கொண்டு, அந்த பிரச்னையை கையாண்டார்.
இது மட்டுமின்றி தமிழகத்தில் வர்தா புயல் தொடங்கி பல்வேறு புயலின் போது இவர் சிறப்பு தடுப்பு அதிகாரியாக பணியாற்றி இருக்கிறார். சுகாதாரத்துறையில் இவருக்கு 6 வருட அனுபவம் உள்ளது. பேரிடர் மேலாண்மை துறையில் இவர் சிறப்பு பயிற்சிகளை பெற்றுள்ளார். தற்போது தமிழக அரசின் கீழ் இவர் வருவாய் நிர்வாகம், பேரிடர் மேலாண்மை மற்றும் தடுப்பு முதன்மை செயலாளர் என்ற பொறுப்பில் பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில்தான் சென்னை மாநகராட்சிக்கு ஆலோசனை வழிகாட்டும் சிறப்பு முதன்மை அதிகாரியாக இவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவருக்கு கீழ் சிறப்பு குழு ஒன்றும் அமைக்கப்பட உள்ளது. ஏற்கனவே கொரோனா பாதிப்பு காரணமாக சென்னையில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளை அரசிடம் ஒப்படைக்க சென்னை மாநகராட்சி உத்தரவு பிறப்பித்துள்ளது. சென்னையில் கொரோனா கேஸ்கள் அதிகரித்து வருகிறது. இதனால் அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக தெரிகிறது.