தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகர்மன்ற துணை தலைவர் இராம.குணசேகரன், நகர திமுக செயலாளராகவும் இருந்து வருகிறார். அவ்வபோது இவர் பல சர்ச்சைகளில் சிக்குவது வழக்கம். இந்நிலையில் அதிரை செல்லியம்மன் கோவில் இடத்தை ஆக்கிரமித்து சட்டவிரோதமாக நகர திமுக அலுவலக கட்டிடம் கட்டுவதாக இராம.குணசேகரன் மீது காவல் நிலையத்தில் பாஜக மாவட்ட தலைவர் பாலமுருகன் புகார் மனு அளித்துள்ளார். அதில் வட்டாட்சியர் முன்னிலையில் நடைபெற்ற அமைதி பேச்சுவார்த்தையில் செல்லியம்மன் கோவில் தீர்த்த குளத்தையொட்டி கட்டிட பணி செய்யக் கூடாது என முடிவானது. ஆனால் அதனை மீறி முகப்பில் துணி, பேனர் உள்ளிட்டவைகளை வைத்து மறைத்துக்கொண்டு உள்ளே மறைமுகமாக சட்டவிரோத கட்டிட பணியை இராம.குணசேகரன் செய்து வருவதாக குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் இந்த புகார் மீது காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் மக்களை திரட்டி தொடர் போராட்டம் நடத்தப்படும் என்று பாஜக மாவட்ட தலைவர் பாலமுருகன் தெரிவித்துள்ளார்.
கடந்த மாதம் அர்டாவுக்கு சொந்தமான ரூ.18கோடி மதிப்பிலான சட்டப்பூர்வ பட்டா நிலத்தின் பணிகளை கும்பலுடன் சென்று இராம.குணசேகரன் தடுத்த பரபரப்பு அடங்குவதற்குள் தற்போது கோவில் நிலத்தை அவர் ஆக்கிரமிக்க துணிந்திருப்பது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.