தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் திமுக நகர செயலாளராக இராம.குணசேகரன் இருந்து வருகிறார். கடந்த ஆண்டு நடந்த நகர்மன்ற தேர்தலில் கூட்டணி கட்சியான கம்யூனிஸ்ட்டிற்கு ஒதுக்கப்ட்ட துணை தலைவர் பதவியை திமுக தலைமையின் உத்தரவையும் மீறி இவர் தட்டி பறித்தார். குறிப்பாக துணை தலைவருக்கான தேர்தல் வேட்புமனு தாக்கல் வரை கம்யூனிஸ்ட்டும் சிறுபான்மை சமூகத்தை சேர்ந்தவருமான தில்னவாஸ் பேகம் தான் துணை தலைவர் என சொல்லி வந்த இராம.குணசேகரன், கடைசி நிமிடத்தில் முதுகில் குத்தி தானே துணை தலைவராகிவிட்டார். இந்த துரோக அரசியல் மூலம் அவரது சுய ரூபத்தை பொதுமக்கள், திமுக உறுப்பினர்கள் புரிந்துக்கொண்டதோடு, அதிரையில் நடக்கும் திமுகவின் நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் தவிர்த்து வருகின்றனர்.
அன்று முதலே இவர் குறித்து ஏராளமான புகார்கள் திமுக தலைமைக்கு பரந்து வருகிறது. அதேபோல் நகர்மன்ற தலைவரின் கணவரான MMS.அப்துல் கரீமுக்கு கட்சியில் எந்த ஒரு முக்கிய பொறுப்பும் கிடைத்துவிட கூடாது என்கிற ரீதியிலும் காய்நகர்த்தி வருவதாக சொல்லப்படுகிறது.
இந்த சூழலில் அதிரை நகர திமுக செயலாளர் பொறுப்பிலிருந்து இராம.குணசேகரனை நீக்க கோரி நகர் முழுவதும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திமுகவிற்கு வாக்களிக்கும் பொதுமக்கள் என்கிற பேரில் ஒட்டப்பட்டிருக்கும் அந்த போஸ்டரில் இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் அதிராம்பட்டினத்தில் கழக விதிகளை மீறி ஜனநாயகத்திற்கு எதிராக செயல்படும் இராம.குணசேகரனை திமுக நகர செயலாளர் பொறுப்பிலிருந்து மாற்றி சமூகநீதியை உறுதி செய்ய வேண்டும் என அச்சிடப்பட்டுள்ளது.