மதுக்கூர் நகர் பகுதியில் புதிதாக மதுக்கடைகள் திறக்க எதிர்ப்பு தெரிவித்து தமுமுக சார்பில் மதுக்கூர் காவல் நிலையத்தில் நேற்று(18/12/2023) மனு அளிக்கப்பட்டுள்ளது. அம்மனுவில் கூறியுள்ளதாவது :
மதுக்கூர், சிவக்கொல்லை பகுதியில் புதிதாக அரசு மதுபான கடை (TASMAC) அமைய இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இப்பகுதியானது பொதுமக்கள் மிகுந்த குடியிருப்புகள் கொண்டது. மேலும் இதன் அருகில் அதிக நிகழ்ச்சிகள் நடைபெறும் திருமண மண்டபமும், வழிபாட்டுத் தலமும், குழந்தைகள் படிக்கும் பள்ளிக்கூடமும் உள்ளது. பள்ளி, கல்லூரி செல்லும் குழந்தைகள், மாணவிகள் இங்கிருந்து தான் பேருந்துகளில் செல்வார்கள். குடியிருப்பு மிகுந்த பகுதி என்பதால் அதிகமான பெண்கள் கடந்து செல்லும் பாதை என்பதாலும் இங்கே மதுபான கடை அமைந்தால் அது பல்வேறு பிரச்சனைகளுக்கு வழி வகுக்கும். கடந்த காலங்களில் இதுபோன்ற அசம்பாவிதங்கள் நடந்ததால் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் போராட்டங்களை நடத்தி மதுக்கூர் நகர் பகுதியில் இருந்து மதுபான கடைகளை அப்புறப்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆகவே தயவு செய்து மதுக்கூர் நகர் பகுதியில் எந்த ஒரு மதுபான கடைகளையும் அமைக்க அனுமதிக்க கூடாது என கேட்டுக்கொள்கிறோம். அவ்வாறு அரசு மதுக்கூர் நகர் பகுதியில் புதிய மதுபான கடைகளை அமைக்க முயற்சிக்கும் பட்சத்தில் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளை ஒருங்கிணைத்து தொடர் போராட்டங்களை கையில் எடுக்க நேரிடும் என்பதையும் தெரிவித்து கொள்கிறோம்.
மேலும் பேருந்து நிழற்குடைகள், பாலங்கள் மற்றும் பொது இடங்களில் மது பிரியர்கள் அமர்ந்து மது அருந்துவது பெருகி வருகிறது. இதனால் பொதுமக்கள் பேருந்திற்கு காத்திருப்பதற்கும், அப்பகுதியை கடந்து செல்வதற்கும் அச்சம் ஏற்படுகிறது. ஆகவே தாங்கள் இதை கண்காணித்து தடுத்து நிறுத்துமாறு கேட்டுக் கொள்கிறோம்.
இவ்வாறு அதில் குறிப்பிட்டபட்டுள்ளது. மேலும் இதுகுறித்து மதுக்கூர் கிராம நிர்வாக அலுவலரிடமும் தமுமுக-வினர் கோரிக்கை வைக்க உள்ளனர்.