தமிழகத்தில் அதிகரித்துவரும் சிறுபான்மை கல்வி நிறுவனங்கள் மீதான இத்தகைய நடவடிக்கைகளை தமிழக முதல்வர் தடுத்து நிறுத்த வேண்டும் என வலியுறுத்தல்!
இதுதொடர்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில துணைத் தலைவர் அப்துல் ஹமீது வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக கல்விச் சேவை செய்துவரும் இமாம் ஷாஃபி பள்ளியை சீல் வைக்கும் நோக்கோடு, பள்ளியின் பெயர் பலகையை ஜேசிபி கொண்டு இடித்து நோட்டீஸ் ஒட்டிச் சென்ற அதிரை நகராட்சியின் நடவடிக்கை கண்டிக்கத்தக்கது. இதுதொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் இருக்கும் நிலையில், அவசர கதியில் சீல் வைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் அதிரை திமுக நகராட்சி நிர்வாகத்தின் செயல் ஏற்புடையதல்ல.
அதிராம்பட்டினத்தில் கல்விக் கூடங்களை நடத்தி, பல ஆண்டுகளாக சிறுபான்மை மக்களின் கல்வி முன்னேற்றத்தில் பெரும் பங்குகளை ஆற்றிவரும் இமாம் ஷாஃபி பள்ளி, நகராட்சிக்கு சொந்தமான குறிப்பிட்ட அந்த வளாகத்திற்கு 1975 முதல் உரிய வாடகையை அரசுக்கு செலுத்தி வரும் நிலையில், திடிரென அந்த வளாகத்தை சீல் வைத்து கைப்பற்ற முனைவது ஏற்புடையதல்ல. இதே தஞ்சை மாவட்டத்தில் சாஸ்திரா பல்கலைக்கழகத்தால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பல நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்களை கையக்கப்படுத்த உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும், அதற்கெதிராக எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளாமல், அரசுக்கு முறையாக வாடகை செலுத்தி, சிறுபான்மை சமூக மக்களின் நலனுக்காக கல்விச் சேவை அளித்துவரும் இமாம் ஷாஃபி பள்ளிக்கு எதிராக அரசு எந்திரங்களை முழுமையாக களமிறக்குவது என்பது பாரபட்சமான நடவடிக்கையாக தெரிகிறது. சமீபத்தில் சென்னை தாம்பரத்தில் இதேபோன்று மெட்ராஸ் கிருத்துவ சமுதாய கல்லூரி வளாகத்தை தாம்பரம் மாநகராட்சி ஆணையர் சீல் வைத்தார்.
தமிழகத்தில் உள்ள சிறுபான்மை கல்வி நிறுவனங்கள், சிறுபான்மை சமூக மக்கள் மட்டுமல்லாது அனைத்து தரப்பினரின் கல்வி முன்னேற்றத்திற்காகவும் அர்ப்பணிப்புடன் பெரும்பங்காற்றி வருகின்றன. ஆனால், சமீப காலங்களாக இவைகள் மீது இதுபோன்ற தாக்குதல்கள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. அரசின் பெரும்பகுதி கல்வித் திட்டங்களை சிறுபான்மை கல்வி நிறுவனங்கள் தான் செயல்படுத்தி வருகின்றன. இப்படி இருக்கும் சூழலில், அக்கல்வி நிறுவனங்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் இத்தகைய நடவடிக்கைகள் கவலையை ஏற்படுத்துகின்றன.
ஆகவே, சிறுபான்மை கல்வி நிறுவனங்கள் மீது மேற்கொள்ளப்படும் இத்தகைய நடவடிக்கைகள் மீது தமிழக முதல்வர் தலையிட்டு, அவை தடையின்றி தொடர்ச்சியாக செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும். அதிரையில் கல்விச் சேவை ஆற்றிவரும் இமாம் ஷாஃபி பள்ளியின் வளாகத்தை கைப்பற்றும் நகராட்சி நிர்வாகத்தின் நடவடிக்கையை தடுத்து நிறுத்தி, மீண்டும் அப்பள்ளி தடையின்றி செயல்படும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்