தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் 12வது வார்டு வாய்க்கால் தெரு பகுதியில் ரஹ்மானிய பள்ளிவாசல் முதல் செக்கடி பள்ளிவாசல் செல்லும் வழியில் சாலையோரத்தில் உள்ள கழிவுநீர் கால்வாயின் கருங்கல் மேற்கூரை திமுக கவுன்சிலரின் கணவர் தன்னுடைய தேவைக்காக எடுத்துச்சென்றது பொதுமக்கள் மத்தியில் அம்பலமாகியுள்ளது.
அதிரை 6வது வார்டு திமுக கவுன்சிலர் கணீஸ் பாத்திமாவின் கணவர் அஹமது காமில் தன்னுடைய சுய லாபத்திற்காக அவர் சாராத 12வது வார்டு வாய்க்கால் தெரு பகுதியில் கடந்த 09/02/2024 மாலை 3மணியளவில் கழிவுநீர் கால்வாயின் கருங்கல் மேற்கூரையை எடுத்து சென்றுள்ளார்.
இந்த கழிவுநீர் வாய்க்கால் கருங்கல் மேற்கூரையை அந்த பகுதி பொதுமக்கள் தங்களுடைய சொந்த பணத்தில் சில ஆண்டுகளுக்கு முன்பு அமைத்துள்ளனர். இந்த மேற்கூரைக்கு அதிரை நகராட்சி எந்த வகையிலும் உரிமை கொண்டாட முடியாத நிலையில் திமுக கவுன்சிலரின் கணவர் இச்சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார்.
மேலும், இச்சம்பவதால் அவ்வழியே செல்லும் பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை அந்த கால்வாய்க்கு உள்ளே விழுந்து உயிர்சேதம் ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும் கழிவுநீர் வாய்க்கால் திறந்து கிடப்பதால் பல்வேறு நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்து செக்கடி தெரு பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர் A.J.தமீம் அன்சாரி கடந்த 24/02/2024 அன்று காணாமல் போன கழிவுநீர் கால்வாயின் கருங்கல் மேற்கூரையை கண்டுபிடித்து அதே இடத்தில் அமைத்து தருமாறு அதிரை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இவை ஒருபுறம் இருக்க மற்றொரு புறம் 6வது வார்டு திமுக கவுன்சிலரின் கணவர் தான் இந்த வேலையை செய்தது என்று அறிந்த பொதுமக்கள் வாய்க்கால் தெருவிற்குட்பட்ட 12வது வார்டு கவுன்சிலர் ராலியா சைபுதீன் தகவல் அளித்து அந்த கருங்கல்லை மீட்டு அதே இடத்தில் அமைத்து உயிர் சேதம் ஏற்படாமல் தடுக்கமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.
ஆனால், அவரோ பொதுமக்கள் தகவல் தெரிவித்தும் எந்த வித நடவடிக்கையும் எடுக்காமல் இருந்துள்ளார்.
இதனால் இந்த சம்பவத்திற்கு 12வது வார்டு கவுன்சிலரான ராலியா சைபுதீன் உடந்தையாக உள்ளாரா..? என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
மேலும் வாய்க்கால் தெரு பகுதியில் பல்வேறு விஷயங்களுக்கு தொடர் கோரிக்கை வைத்தும் கவுன்சிலர் மெத்தனபோக்கில் செயல்படுகிறார் என்றும் பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
மேலும், திமுக 6வது வார்டு கவுன்சிலரின் கணவர் எடுத்துச் சென்ற கழிவுநீர் கால்வாயின் கருங்கல் மேற்கூரையை மீட்டு அதனை மீண்டும் அதே இடத்தில் அமைக்கப்படுமா..? மேலும் இந்த சம்பவத்தை செய்த அஹமது காமில் மீது நடவடிக்கையும் எடுக்கப்படுமா..? என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.