அதிராம்பட்டினம் நகராட்சியில் நடைபெறும் நகர்மன்ற மாதாந்திர கூட்டங்கள், முக்கிய ஆலோசனை முடிவுகள் மற்றும் தீர்மானங்களை சென்னை மாநகராட்சி போல் நேரடி ஒளிபரப்பு செய்வதர்க்கு அனுமதிகோரி அதிரை பத்திரிக்கையாளர் பாதுகாப்பு சங்கம்(APPC) சார்பில் நகராட்சி ஆணையரிடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது.
அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளவை பின்வருமாறு…
அனுப்புநர்,
ஒருங்கிணைப்பாளர்,
அதிரை பத்திரிகை பாதுகாப்பு சங்கம்,
பெறுநர்,
மாண்புமிகு நகராட்சி ஆணையர் அவர்கள்,
அதிராம்பட்டினம்.
பொருள்: அதிரை நகராட்சி தொடர்பாக தகவல்கள், விளம்பரங்களை இணைய ஊடகங்களுக்கு வழங்குவதுடன், நகர்மன்ற கூட்டத்தை நேரடி ஒளிபரப்பு செய்ய அனுமதி கோரி.
அதிராம்பட்டினத்தில் 20 ஆண்டுகளுக்கு முன்பாகவே இணைய ஊடகங்கள் தொடங்கி செயல்பட்டு வருகின்றன. அதன் தொடர்ச்சியாக பல்வேறு ஊடகங்கள் தொடங்கப்பட்டு மக்களின் குரலாக ஒலித்துக்கொண்டு இருக்கின்றன. இதில் பணிபுரிந்த அனுபவத்தின் மூலம் பத்திரிகையாளர்கள் முன்னணி தொலைக்காட்சிகள், ஊடகங்களிலும் பணியில் சேர்ந்துள்ளனர். பெரும்பாலான ஊடகங்கள் பொருளாதார நோக்கமின்றி மக்கள் நலன் கருதியே செயல்பட்டு வருகின்றன.
இவ்வாறு சுயநலனின்றி பொதுநலனுக்காக பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் இயங்கி வரும் இணைய ஊடகங்கள், அதன் ஆசிரியர்கள், பத்திரிகையாளர்களின் உரிமைகளையும் பாதுகாப்பையும் உறுதிபடுத்த இந்த சங்கம் தொடங்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அதிரையின் முன்னணி இணைய ஊடகங்களான அதிரை எக்ஸ்பிரஸ், அதிரை பிறை, டைம்ஸ் ஆஃப் அதிரை, அதிரை இதழ் ஆகிய இணைய ஊடகங்களின் ஆசிரியர்கள் இணைந்து இந்த சங்கத்தை தொடங்கியுள்ளோம்.
அதிரையை பொறுத்தவரை நாளிதழ்களை காட்டிலும் உள்ளூர் இணையதளங்களை மட்டுமே மக்கள் அதிகளவில் வாசிக்கிறார்கள். ஆனால், நகராட்சி தொடர்பான நிகழ்வுகள், அறிவிப்புகள், சுற்றறிக்கைகள், நகர்மன்ற தீர்மானங்கள், ஒப்பந்தங்கள் தொடர்பான தகவல்கள் உள்ளூர் இணைய ஊடகங்களுக்கு தெரிவிக்கப்படுவது இல்லை. எந்த வருவாய் மூலாதாரமும் இன்றி மக்கள் நலனுக்காக மட்டுமே செயல்பட்டு வரும் இணைய ஊடகங்களுக்கு நகராட்சியின் அனைத்து நகர்வுகள், அறிவிப்புகள், தீர்மானங்களையும் செய்திகளாக அனுப்புவதுடன் விளம்பரங்களையும் வழங்குமாறும், நகர்மன்ற மாதாந்திர கூட்டங்கள் மற்றும் சிறப்பு கூட்டங்களை சென்னை மாநகராட்சி உள்ளிட்ட பல்வேறு மாநகராட்சிகள், நகராட்சிகளை போன்று நேரடி ஒளிபரப்பு மற்றும் வீடியோ பதிவு செய்ய இணைய ஊடகங்களுக்கு அனுமதி வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
இப்படிக்கு,
ஒருங்கிணைப்பாளர்,
அதிரை பத்திரிகை பாதுகாப்பு சங்கம்.
என குறிப்பிட்டிருந்தனர்.