நடைபெற இருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, பாஜக கூட்டணி என மும்முனை போட்டி நிலவுகிறது. நாம் தமிழர் கட்சி 40 தொகுதிகளிலும் தனித்து களம் காண்கிறது.
அதிமுக கூட்டணியில் தேமுதிக, எஸ்டிபிஐ, புதிய தமிழகம், புரட்சி பாரதம் ஆகிய கட்சிகள் இடம்பெற்றுள்ளன. அதிமுக கூட்டணியில் உள்ள கட்சிகளுடன் இன்று காலை தொகுதி பங்கீடானது இறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் கூட்டணியில் எஸ்டிபிஐ கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அதிமுக கூட்டணியில் எஸ்டிபிஐ கட்சி, திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் என முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியும், எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக்கும் கையெழுத்திட்டனர்.