ஜம்மு காஷ்மீரில் 8 வயது சிறுமி காவல்துறையினர் உட்பட எட்டு பேரால் கொடூரமாக பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நாடு முழுவதும் கண்டனக்குரல்கள் எழுந்துள்ளன. சிறுமி ‘ஆசிபா’வுக்கு நீதி கேட்டு #JusticeforAsifa என்கிற ஹேஷ்டேக்கும் ட்ரெண்டாகி வருகிறது.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் கதுவா மாவட்டத்தை சேர்ந்த எட்டுவயது சிறுமி ஆசிபா. கடந்த ஜனவரி 10-ஆம் தேதி காணாமல் போனாள். காணாமல் போய் ஒருவாரத்திற்குப் பிறகு ரஸானா வனப்பகுதியில் இருந்து சிறுமியின் உடல் கண்டெடுக்கப்பட்டது. இதுதொடர்பாக ஜம்மு காஷ்மீர் குற்றப்புலனாய்வுத்துறை நடத்திய விசாரணையில், ஒரு சிறுவன் உட்பட 8 பேர் சேர்ந்து சிறுமியை வழிபாட்டுத்தலம் ஒன்றில் மறைத்து வைத்து பலமுறை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியது தெரியவந்துள்ளது. சிறுமிக்கு உணவு கூட தராமல் மயக்கத்திலேயே வைத்திருந்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். சிறுமியை மயக்கத்தில் வைத்திருக்க பயன்படுத்திய மருந்தால், இதயம் மற்றும் நுரையீரல் செயலிழந்ததும் தெரியவந்துள்ளது.
இதனை தொடர்ந்து, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் தஞ்சை தெற்கு மாவட்டம் சார்பில் நாளை(15/04/2018) மாலை 4:30மணியளவில் அதிரை பேருந்து நிலையம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றவுள்ளது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் ஊட்டி அபூதாஹிர் அவர்கள் கண்டன உரையாற்ற உள்ளார்.