2011ம் ஆண்டு மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்பட்டு அதிரை பேரூராட்சி மன்ற தலைவராக பணியை துவங்கினார் S.H.அஸ்லம். அப்போது மாநிலத்தில் அதிமுக-வின் ஆட்சி.
வளர்ச்சி வளர்ச்சி வளர்ச்சி என பலரும் கூக்குரலிட்டு வானத்தை அன்னார்ந்து பார்த்தபோது, அஸ்லம் மட்டும் நிலத்தடி நீர்மட்டத்தை பற்றி யோசித்தார்.
மாநில அரசின் உரிய ஒத்துழைப்பு இல்லாதபோதும் அதிரையின் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த சமூக ஆர்வலர்களுடன் இணைந்து அவர் கடும் முயற்சியை மேற்கொண்டார். குறிப்பாக இரவு நேரத்தில் இளைஞர் பட்டாளத்துடன் கிராமங்கள்தோறும் சென்று வாய்க்கால் உடைப்புகளை சரி செய்து அதிரை குளங்களுக்கு தண்ணீரை தடையின்றி வர செய்தார். கிராமங்களில் சிலரால் அரசியல் ஆதாயத்திற்காக செய்யப்பட்ட சதிகளை திறம்பட துணிவுடன் எதிர்கொண்டதில் இவரது பங்கு மகத்தானது.
அதிமுக அரசு அதிகாரிகள் செய்த தவறுகளை அவர்களிடமே சுட்டிக் காட்டிய S.H.அஸ்லம், பம்பிங் முறையில் அதிரைக்கு ஆற்றுநீரை கொண்டு வந்து அனைவரையும் மூக்கின் மேல் விரல் வைக்க செய்தார். அதிரை நகரில் பிளாஸ்டிக் தடையை தீவிரமாக அமல்படுத்தியது, சுகாதாரத்திற்கு முக்கியத்துவம், சாலைகளில் சுற்றித்திரிந்து மக்களின் உயிர்களுக்கு ஆபத்து விளைவித்த மாடுகளை பேரூராட்சி ஊழியர்களை வைத்து பிடித்தது உள்ளிட்டவை சமூகத்தின் மீதான இவரது அக்கறையை காட்டுகிறது.
அதிமுக ஆட்சியிலேயே அதிரைக்காக அதிகாரிகளை ஆட்டிப்படைத்த S.H.அஸ்லம், தற்போது திமுக ஆட்சியில் அவரது மனைவி நகர்மன்ற தலைவியானால் என்னென்ன செய்வார் என சிலிர்க்கின்றனர் ஆதரவாளர்கள்.
S.H.அஸ்லம் திமுக பொருளாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான டி.ஆர்.பாலுவின் நன்மதிப்பை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.