தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சி தலைவருக்கென பிரத்யேகமாக ஸ்கார்பியோ கார் ஒன்று கடந்த ஆண்டு வாங்கப்பட்டது. நகராட்சி பணி நிமித்தம் நகராட்சி தலைவர் பயணிப்பதற்காக வாங்கப்பட்ட இந்த காரின் பின் பகுதியில் தமிழ்நாடு அரசின் சின்னம் இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில் தற்போது பெண் நகர்மன்ற தலைவராக இருக்கும் எம்.எம்.எஸ்.தாஹிரா அம்மாள் அப்துல் கரீம் இல்லாமல் அரசின் சின்னம் இடம்பெற்று இருக்கும் அந்த வாகனத்தை சிலர் சட்டவிரோதமாக சொந்த தேவைகளுக்கு பயன்படுத்தி வருவதாக நகராட்சி நிர்வாக மண்டல இயக்குநர் சரஸ்வதிக்கு புகார்கள் சென்றிருக்கிறது. இதனையடுத்து இனி அரசு வாகனத்தை தனிநபர்கள் பயன்படுத்த கூடாது என்று அதிரை நகராட்சி ஆணையருக்கு கடிதம் எழுதி இருக்கும் இயக்குநர், இந்த விபரத்தை எழுத்துப்பூர்வமாக நகராட்சி தலைவருக்கு தெரிவிக்குமாறு வலியுறுத்தியுள்ளார். மக்கள் வரி பணத்தில் வாங்கப்பட்ட அரசு வாகனம், சிலரின் சுயதேவைகளுக்காக பயன்படுத்தப்படும் செயல் பொதுமக்கள் மத்தியில் முகசுழிப்பை ஏற்படுத்திருக்கிறது.