நாடெங்கிலும் மதத்தாலும், ஜாதியாலும் சமூகம் பிரிந்து கிடந்தாலும் ஒரு சிலர் எவ்வித மத பேதமும்மின்றி தங்களுக்குள் மதநல்லிணக்கத்தை ஏற்படுத்தி ஒற்றுமையாய் வாழ்ந்து வருவதை ஆங்காங்கே கண்டிருப்போம்.
அதே போல நமது அதிரை நகரத்திலும் R.சோமசுந்தரம் அவர்களின் இல்லத் திருமணத்தின் போது அவர் வீட்டருகில் சினிமா பாடல்கள் ஒலித்துக் கொண்டிருந்தது.
தொழுகைக்காக பாங்கு சப்தம் கேட்டவுடன் அந்த பாடல்கள் உடனடியாக நிறுத்தப்பட்டது. இது குறித்து திருமண வீட்டாரிடம் நாம் கேட்டபோது;
இஸ்லாமியர்களும் நாங்களும் இப்போதல்ல அப்போதிலிருந்தே அண்ணன், தம்பிகளாக உற்ற நண்பர்களாக பழகி வருகிறோம். எங்களுக்கு ஒன்று என்றால் அவர்களும், அவர்களுக்கு ஒன்று என்றால் நாங்களும் ஓடோடி சென்று உதவக் கூடியவர்கள்.
அதனால் தான் அவர்களுடைய பள்ளிவாசல்களில் பாங்கு சப்தம் ஒலித்தபோது மரியாதைக்காக நாங்கள் எங்கள் திருமண வீட்டில் ஒலித்த பாடல்களை நிறுத்தினோம் என்றனர்.
இந்து, முஸ்லிம், கிறிஸ்துவர்களை மதத்தைக் காட்டி பிரிக்க நினைத்தாலும் தமிழகத்தில் சிலரின் சூழ்ச்சி பலிக்காது என்பதற்கு இது போன்ற சம்பவங்களும் சான்றாக இருக்கிறது.
நாளைய தினம் திருமணம் எனும் பந்தத்தில் இணையும் மணமக்கள் S.சிலம்பரசன் – S.வினிதா ஆகியோர் என்றென்றும் சிறப்புடன் பல்லாண்டு வாழ எமது ‘அதிரை எக்ஸ்பிரஸ்’ செய்திக் குழுமம் மனதார வாழ்த்துகிறது.