குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் நடந்து வரும் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. பல்வேறு அரசியல் எதிர்கட்சிகளும் போராட்டங்களை முன்னெடுத்துள்ள நிலையில் கல்லூரி மாணவர்களும் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.
குடியுரிமை சட்டத்தை எதிர்த்து, அற வழியில் போராடிய டெல்லி சஹீன் பாக், ஜாமியா மில்லியா உள்ளிட்ட கல்லூரி மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்களை கண்டித்தும், குடியுரிமை திருத்த சட்டத்தை வாபஸ் பெறக் கோரியும் அதிரை காதிர் முகைதீன் கல்லூரி மாணவர்கள் தொடர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.
காலை 10 மணிக்கு நடைபெற்ற போராட்டம் ஒன்றரை மணி நேரங்கள் நீடித்தது. அதிரையில் குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து சற்றும் சளைக்காமல் அதிரை காதிர் முகைதீன் கல்லூரி மாணவர்கள் தொடர்ந்து 20 நாட்களுக்கும் மேலாக குரல் கொடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.