தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வருகிறது. தினசரி கொரோனா கேஸ்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கிறது. தற்போது வரை தமிழகத்தில் சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை 162181 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் நேற்று 29272 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. தமிழகத்தில் நேற்று 19182 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி உள்ளனர்.
இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்துவது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நாளை நடக்க உள்ளது. நாளை மாலை 5 மணிக்கு தலைமை செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் சட்டமன்ற கட்சி தலைவர்கள் கூட்டம் நடக்க உள்ளது.
சட்டமன்றத்தில் இடம்பெற்றுள்ள கட்சிகள் அனைத்திற்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கூட்டத்தில் பங்கேற்க 13 கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருக்கிறது. ஒவ்வொரு கட்சி சார்பாக 2 பேர் இதில் கலந்து கொள்ள முடியும். முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்ற போது, அனைத்து கட்சிகளின் ஆலோசனைகளையும் பெறுவேன், கொரோனா விஷயத்தில் கட்சிகள் தரும் ஆலோசனைகளை ஏற்பேன் என்று அறிவித்து இருந்தார்.
இந்த நிலையில் சொன்னபடியே அனைத்து கட்சி கூட்டத்திற்கு முதல்வர் ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். ஸ்டாலின் இப்படி மக்கள் பிரச்சனைகளுக்காக மற்ற கட்சிகளை அரவணைத்து செல்வது பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.